எட்டயபுரம் ஆசிரியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை


எட்டயபுரம்   ஆசிரியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை
x
தினத்தந்தி 22 Sep 2022 6:45 PM GMT (Updated: 22 Sep 2022 6:45 PM GMT)

எட்டயபுரம் ஆசிரியர் வீட்டில் நகை, பணம் கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

எட்டயபுரத்தில் ஆசிரியர் வீட்டில் 5½பவுன் நகைகள், ரூ.40 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

ஆசிரியர் தம்பதி

எட்டயபுரம் கான்சாபுரம் 2-வது தெருவை சேர்ந்தவர் மாடசாமி (வயது 56). இவர் என்.வேடபட்டியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி உமாவும் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்கள் நேற்று முன்தினம் இரவு வீட்டின் மாடியில் தூங்கச் சென்றனர்.

நேற்று காலையில் மாடியில் இருந்து கீழ் பகுதிக்கு வந்துபார்த்த போது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது.

நகை, பணம் கொள்ளை

இதனால் அதிர்ச்சியடைந்த மாடசாமி, வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, அங்கிருந்த 2 பீரோக்களும் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோவில் இருந்த 5½பவுன் தங்க நகைகள், ரூ.40 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

ஆசிரிய தம்பதியர் மாடிக்கு தூங்க செல்வதை நோட்டமிட்டு கொள்ளையர்கள் வீட்டின் பின்பகுதி கதவை உடைத்து உள்ளே புகுந்து நகைகள், பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

கொள்ளையர்களுக்கு வலைவீச்சு

இதுகுறித்த புகாரின் பேரில் எட்டயபுரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முத்துவிஜயன் சம்பவ வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தினர். தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. இதுகுறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.


Next Story