'அனைவரும் மாசில்லா போகி பண்டிகையை கொண்டாட வேண்டும்' - சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் வலியுறுத்தல்


அனைவரும் மாசில்லா போகி பண்டிகையை கொண்டாட வேண்டும் - சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் வலியுறுத்தல்
x

இயற்கையை பாதுகாக்கும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் நாளை போகி பண்டிகையின் போது பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை தீயில் போட்டு எரிப்பதை தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக தந்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த போது அவர் கூறியதாவது;-

"வீட்டில் இருக்கும் பழைய, தேவையில்லாத பொருட்களை கழிக்கும் நோக்கில் போகி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் காலப்போக்கில் போகி பண்டிகையின் போது பிளாஸ்டிக், டயர் உள்ளிட்ட பொருட்களை எரிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளதால், சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.

எனவே வயதானவர்களுக்கு சிரமத்தையும், குழந்தைகளுக்கு பல்வேறு நோய்களையும் கொண்டு சேர்க்கும் அத்தகைய செயல்களை நாம் தவிர்க்க வேண்டும். இயற்கையை பாதுகாக்கும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. இது நமக்கு மட்டுமின்றி அடுத்த தலைமுறைக்கும் நன்மையை தரக்கூடிய செயல்.

அந்த அடிப்படையில் அனைவரும் மாசில்லா போகி பண்டிகையை கொண்டாட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்" என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.




Next Story