மருத்துவ பணியாளர் தேர்வு வாரிய இ.சி.ஜி. டெக்னீசியன்காலி பணியிடங்களுக்கு முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்கலாம்

தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தால் இ.சி.ஜி. டெக்னீசியன் காலி பணியிடங்களுக்கு பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணியிடங்களில் முன்னாள் படை வீரர்களுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே பழைய கல்வி திட்டப்படி பி.யூ.சி. படித்தவர்கள், பிளஸ்-2 வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் அதனுடன் பல்கலைக்கழக படிப்பு, தமிழ்நாடு அரசு நடத்தும் எலக்ட்ரோ கார்டியோ கிராம் அல்லது டிரெட்மில் டெக்னீசியன் ஒரு ஆண்டு சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும். ஓ.சி. பிரிவை சேர்ந்த முன்னாள் படை வீரர்களுக்கு 50 வயது உச்சவரம்பாகும். மற்ற பிரிவை சார்ந்த முன்னாள் படை வீரர்களுக்கு வயது உச்ச வரம்பு இல்லை.
விண்ணப்பதாரர்கள் www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க நாளை (திங்கட்கிழமை) கடைசி நாளாகும். எனவே தர்மபுரி மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த பணிக்கு ஏற்கனவே விண்ணப்பித்து இருந்தால் அது குறித்த விவரத்தை முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பாக மேலும் விவரங்கள் பெற தர்மபுரியில் உள்ள முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தை அணுகலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






