முன்னாள் படைவீரர்கள் அரசு நலத்திட்டங்களை பெற்று பயனடைய வேண்டும்


முன்னாள் படைவீரர்கள் அரசு நலத்திட்டங்களை பெற்று பயனடைய வேண்டும்
x
தினத்தந்தி 30 Sep 2022 6:45 PM GMT (Updated: 30 Sep 2022 6:46 PM GMT)

முன்னாள் படைவீரர்கள் அரசின் நலத்திட்டங்களை பெற்று பயனடைய வேண்டும் என கலெக்டர் மோகன் அறிவுரை வழங்கினார்

விழுப்புரம்

விழுப்புரம்

குறைதீர்க்கும் கூட்டம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர் நலத்துறையின் மூலம் முன்னாள் படைவீரர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் மோகன் தலைமை தாங்கி முன்னாள் படைவீரர்களிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்திய திருநாட்டை பாதுகாப்பது என்னும் அலப்பறியா பணியை செய்து வரும் வீரர்களுக்கு என்றும் பாதுகாப்புடன் இருந்திடும் வகையில் அவர்களின் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

அறிவுரை

விழுப்புரம் மாவட்டத்திற்கு 2020-ம் ஆண்டிற்கு படைவீரர் கொடி நாள் நிதியாக ரூ.50 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில் ரூ.1 கோடியே 12 லட்சத்து 14 ஆயிரம் வசூல் செய்து மாநில அளவில் 2-ம் இடத்தை தக்க வைக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டிற்கு ரூ.1 கோடியே 17 லட்சத்து 75 ஆயிரம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனைவிட கூடுதலாக வசூல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசால் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களை முன்னாள் படைவீரர்கள் பெற்று பயனடைய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து கல்வி நிதியுதவியாக ஒரு முன்னாள் படைவீரரின் வாரிசுதாரருக்கு ரூ.25 ஆயிரமும், திருமண நிதியுதவியாக 2 பேருக்கு தலா ரூ.25 ஆயிரமும், உடல்நலம் பாதிக்கப்பட்ட முன்னாள் படைவீரருக்கு மருத்துவ நிதியுதவியாக ரூ.42 ஆயிரமும் என மொத்தம் 4 பேருக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மோகன் வழங்கினார்.

கூட்டத்தில் முன்னாள் படைவீரர் நலத்துறை உதவி இயக்குனர் அருள்மொழி, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் பொன்னம்பலம், முன்னாள் படைவீரர் நலத்துறை கண்காணிப்பு அலுவலர் விஜயகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story