கடையம் ராமநதி அணையில் இருந்து உபரிநீர் திறப்பு

கடையம் ராமநதி அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.
கடையம்:
தென்காசி மாவட்டம் கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் 84 அடி உயரம் கொண்ட ராமநதி அணை அமைந்துள்ளது. இந்த அணையானது 5 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள், 33-க்கும் மேற்பட்ட குளங்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது. தற்போது வளிமண்டல சுழற்சி காரணமாக நெல்லை, தென்காசி பகுதிகளில் கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் ராமநதி அணை அதன் முழு கொள்ளளவை எட்டும் தருவாயில் உள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 82 அடியை எட்டியுள்ள நிலையில் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரக்கூடிய 110 கன அடி நீர் முழுவதுமாக உபரிநீராக திறக்கப்பட்டுள்ளது. ஆற்று மதகுகள் மூலமாக 60 கனஅடி நீரும், முக்கிய மதகுகள் வழியாக 50 கன நீரும் திறந்துவிடப்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் ஆற்றுப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.






