காரைக்குடியில் பரபரப்பு: அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு தப்பிய கும்பலுக்கு வலைவீச்சு


காரைக்குடியில் பரபரப்பு:  அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு தப்பிய கும்பலுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 10 Aug 2023 7:00 PM GMT (Updated: 10 Aug 2023 7:00 PM GMT)

காரைக்குடியில், அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிய கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

சிவகங்கை

காரைக்குடி,

காரைக்குடியில், அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிய கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

பெட்ரோல் குண்டுவீச்சு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஜீவா நகரை சேர்ந்தவர் பழனி முருகன் (வயது 45). மீன் வியாபாரம் செய்து வருகிறார். அ.தி.மு.க. பிரமுகரான இவர், அக்கட்சியின் முன்னாள் வட்ட செயலாளர் ஆவார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகில் குலதெய்வ கோவிலுக்கு நேற்று முன்தினம் பழனி முருகன் சென்றிருந்தார். அவருடைய குடும்பத்தினர் வீட்டில் இருந்தனர். இரவு அனைவரும் தூங்கிக்கொண்டிருந்தனர்.

நேற்று அதிகாலை 3 மணி அளவில் மர்ம நபர்கள் அங்கு வந்தனர். பழனி முருகன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசினர். அது பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது.

போலீசார் விசாரணை

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பழனிமுருகன் குடும்பத்தினர், வெளியே வந்து பார்த்தபோது வீட்டு வாசலில் திரைச்சீலை எரிந்து கொண்டிருந்தது. வீட்டின் முன்பகுதி கருகிய நிலையில் இருந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

இது குறித்து காரைக்குடி வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அப்பகுதியில் பொருத்தி உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிய நபர்களை தேடிவருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story