கல்குவாரியில் வெடி வைத்து பாறைகள் தகர்ப்பு


கல்குவாரியில் வெடி வைத்து பாறைகள் தகர்ப்பு
x
தினத்தந்தி 22 Feb 2023 7:00 PM GMT (Updated: 22 Feb 2023 7:00 PM GMT)

நிலக்கோட்டை அருகே கல்குவாரியில் வெடி வைத்து பாறைகள் தகர்த்து வருவதை கண்டித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

நிலக்கோட்டை அருகே மிளகாய்பட்டியில் உள்ள கல்குவாரியில், அவ்வப்போது வெடிகள் வைத்து பாறைகள் தகர்க்கப்படுகின்றன. இதில் பாறைகள் வெடித்து சிதறி அருகே உள்ள விவசாய நிலத்தில் விழுகின்றன. மேலும் அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் மற்றும் கால்நடைகள் மீது கற்கள் விழுந்து காயம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக புகார் அளித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில் கல்குவாரியில் வெடி வைத்து தகர்த்ததில் கற்கள் பறந்து போய் விவசாய நிலத்தில் நேற்று மதியம் விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் நேற்று அங்கு திரண்டனர். பின்னர் கல்குவாரியில் இருந்த வாகனத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி, அங்கிருந்து கிராம மக்களை கலைந்து போக செய்தனர். இனி வருங்காலத்தில் பாறைகளை வெடி வைத்து தகர்த்தால், நிலக்கோட்டை நால்ரோடு பகுதியில் மறியலில் ஈடுபட போவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story