அனைத்து அரசு பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டம் விரிவாக்கம்: சட்டசபையில் முதல்-அமைச்சர் அறிவிப்பு


அனைத்து அரசு பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டம் விரிவாக்கம்: சட்டசபையில் முதல்-அமைச்சர் அறிவிப்பு
x

ரூ.4 ஆயிரம் கோடியில் 10 ஆயிரம் கி.மீ. ஊராட்சி ஒன்றிய சாலைகள் தரம் உயர்த்தப்படும் என்றும், முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படுவதாகவும் சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

சென்னை,

மரபுப்படி ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தில் கவர்னர் உரையாற்றுவது வழக்கம். அந்த வகையில், கடந்த 9-ந் தேதி (திங்கட்கிழமை) சட்டசபையில் கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். குறிப்பிட்ட பகுதிகளை படிக்காமல் தவிர்த்துவிட்டதாக சலசலப்பு எழுந்த நிலையில், அவருக்கு எதிராக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

அடுத்த நாள் (10-ந் தேதி) காங்கிரஸ் உறுப்பினர் திருமகன் ஈவெரா (ஈரோடு கிழக்கு தொகுதி) மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. 11 மற்றும் 12-ந் தேதிகளில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட மொத்தம் 16 பேர் பேசினார்கள்.

சட்டசபை கூட்டத்தின் நிறைவு நாளான நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் உரை வழங்கி பேசினார். அப்போது அவர் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது:-

கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம்

கடந்த இரு நாட்களாக உறுப்பினர்கள் இந்த அவையில் எடுத்து வைத்திருக்கக்கூடிய கருத்துகள் தொடர்பாக நான் அமைச்சர்களோடு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளோடு ஆலோசித்தேன். அதனடிப்படையில் சில அறிவிப்புகளை தற்போது நான் வெளியிட விரும்புகிறேன்.

முதலாவதாக, கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் அடிப்படையில் முக்கிய ஊராட்சி ஒன்றிய சாலைகளை வலுப்படுத்தவும், தரம் உயர்த்தவும், "முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம்" என்ற புதிய திட்டத்தை அரசு செயல்படுத்தும். முதல்கட்டமாக, 2 ஆண்டுகளில் 10 ஆயிரம் கி.மீ. அளவுக்கு ஊராட்சி ஒன்றிய சாலைகள் ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்படும்.

காலை உணவு திட்டம்

இரண்டாவதாக முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம். முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம் 15-9-2022 அன்று மதுரையில் தொடங்கப்பட்டது. 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளிக் குழந்தைகளுக்கு முன்னோடி முயற்சியாக செயல்படுத்தப்பட்டது.

இத்திட்டம் முதல்கட்டமாக, 1,545 அரசு பள்ளிகளில் பயிலும் 1.14 லட்சம் மாணவர்களுக்கு அவர்களின் பள்ளியில் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் பெரும்பாலான பொதுமக்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் மிகவும் பாராட்டப்பட்டு, அதை மகிழ்ச்சியோடு வரவேற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

அனைத்து பள்ளிகளுக்கும் விரிவாக்கம்

மேலும், இந்த முயற்சியின் பயனாக, பள்ளிகளில் மாணவர்களின் வருகை எண்ணிக்கை வழக்கத்தைவிட அதிகரித்துள்ளது. இதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு, இந்த திட்டத்தினை 2023-2024-ம் ஆண்டு, படிப்படியாக மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கும் விரிவாக்கம் செய்திட முடிவு செய்துள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

முதலீட்டாளர்கள் மாநாடு

மூன்றாவதாக, ஒரு முக்கியமான அறிவிப்பு. உலக முதலீட்டாளர்கள் மாநாடு. பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னணி மாநிலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இந்திய அளவில் பொருளாதாரத்தில் 2-வது பெரிய மாநிலமாக தமிழ்நாடு திகழ்கின்றது.

முதலீடுகளை பெருமளவில் ஈர்த்து, லட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கிடவும், மாநில பொருளாதாரத்தை வலுவடையச் செய்திடவும், நான் 2030-ம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டினை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் இலக்கை நிர்ணயித்தேன். அதனை அடைய பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்த இலக்கினை நோக்கி பயணம் மேற்கொள்ளும் விதமாக, பல முதலீட்டாளர்கள் மாநாடுகள் துபாய் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்டன. மேலும், உலகளவில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் ஒரு உயர்மட்ட குழு, ஜெர்மனி, அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் மற்றும் தைவான் போன்ற நாடுகளுக்கும் அவர்கள் பயணம் மேற்கொண்டார்கள்.

சென்னையில் நடத்தப்படும்

சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரத்தில் நடைபெற்ற உலக பொருளாதார மன்றத்தின் ஆண்டு கூட்டம் கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். நம் மாநிலத்திற்கு மேலும் முதலீடுகளை ஈர்த்து, வேலைவாய்ப்புகளை உருவாக்கி, பொருளாதாரம் வளர்ச்சி அடைவதற்காக, "உலக முதலீட்டாளர்கள் மாநாடு" வரும் 2024-ம் ஆண்டு, ஜனவரி மாதம் 10, 11-ம் நாட்களில், 100-க்கும் மேற்பட்ட நாடுகளின் பங்கேற்புடன், பெருமளவில் பிரமாண்டமாக சென்னையில் நடத்தப்படும் என்பதை இம்மாமன்றத்தில் மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

அடுத்த மாதம் (பிப்ரவரி) இறுதியில், தமிழக சட்டசபையில் 2023-2024-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் ஆகியவை தனித்தனியாக தாக்கல் செய்யப்படும். தொடர்ந்து, பட்ஜெட் மீதான விவாதம் நடப்பதுடன், துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதமும் நடைபெறும். இந்த கூட்டத்தொடர், சுமார் 1½ மாதங்கள் வரை நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story