பிறப்பு சான்றிதழில் பெயர் பதிய காலக்கெடு நீட்டிப்பு கலெக்டர் தகவல்


பிறப்பு சான்றிதழில் பெயர் பதிய காலக்கெடு நீட்டிப்பு       கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 18 Oct 2023 6:45 PM GMT (Updated: 18 Oct 2023 6:45 PM GMT)

பிறப்பு சான்றிதழில் பெயர் பதிய காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

கடலூர்


இதுதொடர்பாக கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

பிறப்பு சான்றிதழ்

பிறப்பு பதிவு குழந்தையின் முதல் உரிமை. பிறப்பு சான்றிதழ் குழந்தையின் சட்டப்பூர்வ குடியுரிமைக்கான அத்தாட்சி. குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் பதிவு செய்து, இலவச பிறப்பு சான்றிதழ் பெற, பிறப்பு- இறப்பு பதிவு சட்டம், 1969 வழிவகை செய்கிறது. பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயரை பதிவு செய்தால் மட்டுமே, அது முழுமையான சான்றிதழ் ஆகும்.

பிறப்பு சான்றிதழ் குழந்தை பள்ளியில் சேர, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் பெற, பாஸ்போர்ட், விசா உரிமம், அயல்நாட்டில் குடியுரிமை பெற இன்றியமையாத ஆவணமாக உள்ளது. ஒரு குழந்தையின் பிறப்பு, பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருப்பின் அக்குழந்தையின் பிறப்பு பதிவு செய்யப்பட்ட நாளில் இருந்து 12 மாதத்திற்குள் குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளர் எழுத்து வடிவிலான உறுதிமொழியை சம்பந்தப்பட்ட பிறப்பு- இறப்பு பதிவாளரிடம் அளித்து எவ்வித கட்டணமும் இன்றி பெயர் பதிவு செய்திடலாம்.

காலஅவகாசம் நீட்டிப்பு

12 மாதங்களுக்கு பிறகு 15 வருடங்களுக்குள் ரூ.200 தாமதக் கட்டணம் செலுத்தி, குழந்தையின் பெயரை பதிவு செய்திடலாம். 15 ஆண்டுகளுக்கு மேல் குழந்தையின் பெயரை பதிவு செய்ய இயலாது. இந்திய தலைமை பிறப்பு இறப்பு பதிவாளரின் அறிவுரைப்படி, 1.1.2000 -க்கு முன்பு பதிவு செய்த பிறப்புகளுக்கும், 1.1.2000 -க்கு பிறகு 15 ஆண்டுகள் கடந்த பிறப்பு பதிவுகளுக்கும், குழந்தை பெயர் வைத்து பிறப்பு சான்று பெற 31.12.2024 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பிறப்பு பதிவு செய்யப்பட்டுள்ள நகராட்சி, மாநகராட்சி அல்லது சம்பந்தப்பட்ட தாலுகா, பேரூராட்சி அலுவலரிடம் உரிய ஆதாரங்களுடன் (கல்வி சான்று, ஓட்டுநர் உரிமம்) விண்ணப்பிக்கலாம். இவ்வாறான கால அவகாச நீட்டிப்பு, இனிவரும் காலங்களில் வழங்கிட இயலாது என இந்திய தலைமை பிறப்பு இறப்பு பதிவாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழ் பெற்று பயன்பெறலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story