ராமேசுவரம்-செகந்திராபாத் வாராந்திர சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு


ராமேசுவரம்-செகந்திராபாத் வாராந்திர சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு
x

கோப்புப்படம்

ராமேசுவரம்-செகந்திராபாத் இடையே வாராந்திர சிறப்பு ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டது.

மதுரை,

தென்மத்திய ரெயில்வே சார்பில் தெலுங்கானா மாநிலம் செகந்திராபாதில் இருந்து ராமேசுவரத்துக்கு வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் கடந்த 4-ந் தேதி முதல் நாளை (புதன்கிழமை) வரை புதன்கிழமைகளில் செகந்திராபாதில் இருந்தும், மறுமார்க்கத்தில், கடந்த 6-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் ராமேசுவரத்தில் இருந்தும் இயக்கப்படுகிறது.

இதற்கிடையே, இந்த ரெயில் சேவை தற்போது பயணிகளின் வசதிக்காக நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, செகந்திரபாத்தில் இருந்து புறப்படும் ரெயில் வருகிற 22-ந் தேதி வரையிலும், ராமேசுவரத்தில் இருந்து புறப்படும் ரெயில் அடுத்த மாதம் 24-ந் தேதி வரையிலும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதில், செகந்திராபாத்-ராமேசுவரம் சிறப்பு ரெயில் (வ.எண்.07695) இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 10.30 மணிக்கு ராமநாதபுரம் வந்தடையும். மறுமார்க்கத்தில் ராமநாதபுரம் - செகந்திராபாத் சிறப்பு ரெயில் (வ.எண்.07696) ராமநாதபுரத்தில் இருந்து காலை 9.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.50 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும்.

இந்த ரெயில்கள் நளகொண்டா, மிரியால்குடா, சட்டெனப்பள்ளி, குண்டூர், தெனாலி, பாபட்லா, கவளி, நெல்லூர், கூடூர், சென்னை எழும்பூர், செங்கல்பட்டு, விழுப்புரம், சீர்காழி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இதில், 3 இரண்டடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 2 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 4 பொதுப்பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

தற்போது பாம்பன் பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால் மேற்கண்ட ரெயில்கள் ராமேசுவரத்துக்கு பதிலாக ராமநாதபுரம் வரை மட்டும் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story