கூடுதல் ஈரப்பத நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்


கூடுதல் ஈரப்பத நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்
x

சீர்காழி பகுதியில் தொடர் மழையால் குறுவை நெற்பயிர்கள் சாய்ந்து பாதிக்கப்பட்டுள்ளதால் கூடுதல் ஈரப்பத நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை

சீர்காழி:

சீர்காழி பகுதியில் தொடர் மழையால் குறுவை நெற்பயிர்கள் சாய்ந்து பாதிக்கப்பட்டுள்ளதால் கூடுதல் ஈரப்பத நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறுவை சாகுபடி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவிற்குட்பட்ட சீர்காழி, கொள்ளிடம், திருவெண்காடு, வைத்தீஸ்வரன் கோவில், மாதானம், எடமணல், ஆச்சாள்புரம், நல்லூர், குன்னம், பெரம்பூர், கதிராமங்கலம், திட்டை, வள்ளுவக்குடி, கொண்டல், அகனி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் மின் மோட்டாரை பயன்படுத்தி முன்னதாக குறுவை சாகுபடி பணியில் ஈடுபட்டனர். தற்போது பல்வேறு இடங்களில் நெற்பயிர்கள் அறுவடை பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் மழை நீரில் சாய்ந்தன.

வயலில் தேங்கி நிற்கும் மழைநீர்

இதை தொடர்ந்து வயலில் தேங்கி நிற்கும் மழை நீரை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.தொடர்ந்து மழை பெய்து வருவதால் தண்ணீர் வடியாமல் உள்ளது. இதனால் நெற்பயிர்கள் முளைக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், சீர்காழி பகுதியில் பெய்த மழையால் அறுவடைக்கு தாயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் சாய்ந்தன. வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் நெற்பயிர்கள் அதிக ஈரப்பதத்துடன் காணப்படுகிறது.

கூடுதல் ஈரப்பத நெல்

தமிழக அரசு குறுவை நெல்லை கொள்முதல் செய்ய நேரடி கொள்முதல் நிலையங்களை திறந்துள்ளது. தற்போது மழையில் நெற்பயிர்கள் சாய்ந்ததால் கூடுதல் ஈரப்பதத்துடன் காணப்படுகிறது. எனவே கூடுதல் ஈரப்பதத்துடன் காணப்படும் நெல்லை அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்றனர்.


Next Story