நீட் தேர்வில் தோல்வி; திருவள்ளூர் மாணவி தூக்கிட்டு தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்

நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் திருவள்ளூரை சேர்ந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சென்னை,
நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. அந்தவகையில் நடப்பு கல்வியாண்டுக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் 17-ந்தேதி நடந்தது. நாடு முழுவதும் இந்த தேர்வை எழுத 18 லட்சத்து 72 ஆயிரத்து 343 பேர் பதிவு செய்து இருந்தனர். அதில் 17 லட்சத்து 64 ஆயிரத்து 571 பேர் தேர்வை எழுதினர்.
இந்த நிலையில் தேர்வு முடிவு நேற்று இரவு 11 மணிக்கு மேல் தேர்வு முடிவு வெளியானது. அதன்படி, இந்த தேர்வில் 9 லட்சத்து 93 ஆயிரத்து 69 பேர் தேர்ச்சி பெற்று இருப்பதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இதன் தேர்ச்சி சதவீதம் 56.3 ஆகும். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகம் என்றாலும், கடந்த ஆண்டின் தேர்ச்சி சதவீதத்தைவிட சற்று குறைந்திருக்கிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், 1 லட்சத்து 32 ஆயிரத்து 167 பேர் தேர்வு எழுதியதில் 67 ஆயிரத்து 787 பேர் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். இதன் தேர்ச்சி சதவீதம் 51.3 ஆகும். இதுவும் கடந்த ஆண்டைவிட குறைவு. மொத்தம் 720 மதிப்பெண்ணுக்கு நடந்த தேர்வில் 715 மதிப்பெண் பெற்று அகில இந்திய அளவில் ராஜஸ்தான் மாணவி தனிஷ்கா முதலிடம் பிடித்துள்ளார்.
இந்நிலையில், திருவள்ளூர், அம்பத்தூர், சோழபுரம் பகுதியை சேர்ந்த லக்சனா ஸ்வேதா ( வயது 19) என்ற மாணவி நீட் தேர்வு எழுதி உள்ளார். தேர்வு முடிவுகளின் அடிப்படையில் மாணவி தோல்வி அடைந்துள்ளார். இந்நிலையில், தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவி ஸ்வேதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.