மேரக்காய் கொள்முதல் விலை வீழ்ச்சி


மேரக்காய் கொள்முதல் விலை வீழ்ச்சி
x
தினத்தந்தி 18 Sep 2023 12:15 AM GMT (Updated: 18 Sep 2023 12:15 AM GMT)

கோத்தகிரியில் மேரக்காய் கொள்முதல் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரியில் மேரக்காய் கொள்முதல் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

மேரக்காய் சாகுபடி

கோத்தகிரி பகுதி மக்களின் முக்கிய தொழிலாக தேயிலை விவசாயமே உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பச்சை தேயிலை விலை வீழ்ச்சி காரணமாக விவசாயிகள் வெகுவாக பாதித்து உள்ளனர். இதனால் பெரும்பாலான விவசாயிகள் மாற்று விவசாயமாக கொய்மலர் சாகுபடி, காளான் சாகுபடி, ஸ்ட்ராபெர்ரி பழ சாகுபடி, மலை காய்கறிகள் மற்றும் ஏற்றுமதி தரம் வாய்ந்த இங்கிலீஷ் காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர்.

இருப்பினும், வனவிலங்குகள் தொல்லை, தொழிலாளர் பற்றாக்குறை, விதை, உரங்கள் மற்றும் இடுபொருட்களின் விலையேற்றம் ஆகிய சிக்கல்களை எதிர்கொண்டு, வங்கி கடன் பெற்று விவசாயம் செய்து வருகிறார்கள். கோத்தகிரி அருகே கூக்கல்தொரை, நெடுகுளா, எரிசிபெட்டா, இந்திராநகர், வா.ஊ.சி. நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மேரக்காய் பயிரிட்டு உள்ளனர்.

விலை வீழ்ச்சி

இந்தநிலையில் கோத்தகிரி பகுதியில் தொடர் மழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பி வருவதுடன், காய்கறி தோட்டங்கள், மீண்டும் பசுமைக்கு திரும்பி உள்ளன. மேலும் மேரக்காய் விளைச்சலும் அதிகரித்து வருகிறது. இருப்பினும், கொள்முதல் விலை வீழ்ச்சியடைந்து உள்ளதால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, கடந்த சில மாதங்களுக்கு முன்பு மற்ற காய்கறிகள் விலை அதிகரித்த போது, மேரக்காய் கிலோ ரூ.20 முதல் ரூ.25 வரை கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால், தற்போது கோத்தகிரி காய்கறி மண்டிகளில் கிலோ ரூ.5-க்கும், தரமான மேரக்காய் அதிகபட்சமாக ரூ.10-க்கும் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும் மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளில் மேரக்காய் கிலோ ரூ.10-க்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இது விவசாயிகளுக்கு போதுமான விலையாக இல்லை என்றனர்.


Next Story