பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்கவந்த குடும்பத்தினரால் பரபரப்பு


பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்கவந்த குடும்பத்தினரால் பரபரப்பு
x

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு தீக்குளிப்பதற்காக பெட்ரோல்-மண்எண்ணெயை கொண்டு வந்திருந்த ஒரு குடும்பத்தினரால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூர்

கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று காலை ஒரு குடும்பத்தினர் வந்தனர். அவர்கள் திடீரென்று தீக்குளிக்கப்பதற்காக குளிர்பான காலி பாட்டில்களில் கொண்டு வந்திருந்த பெட்ரோல் மற்றும் மண்எண்ணெயை கையில் எடுத்தனர். இதனை கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் ஓடிச்சென்று அவர்களிடம் இருந்த பெட்ரோல், மண்எண்ணெய் ஆகியவற்றை கைப்பற்றி விசாரித்தனர். விசாரணையில் அவர், வேப்பந்தட்டை தாலுகா, தழுதாழை அம்பேத்கர் தெருவை சேர்ந்த இளையராஜா (வயது 42) என்பதும், அவருடன் வந்திருந்தவர்கள் அவருடைய மனைவி லதா(32), மகன் சிவமுகுந்தன்(13), மகள்கள் ஹன்சிகா(10), நிஷாந்தினி(7) ஆகியோர் என்பதும் தெரியவந்தது.

டாஸ்மாக்கடை அருகே பெட்டிகடை

இளையராஜா தழுதாழை கிராமத்தில் உள்ள டாஸ்மாக்கடை அருகே சுமார் 300 மீட்டர் தூரத்தில் தனக்கு சொந்தமான காட்டு நிலத்தில் பெட்டிக்கடையும், மேலும் இட்லி, பனியாரம், தட்டை பயறு உள்ளிட்டவையும் விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில் டாஸ்மாக்கடை அருகே சட்ட விரோதமாக மதுபான கூடம் (பார்) நடத்தி வருபவரின் துண்டுதலின்பேரில், தி.மு.க. உள்ளிட்ட கட்சியை சேர்ந்தவர்கள் இளையராஜாவை அந்த இடத்தில் கடை வைக்கக்கூடாது என்று கூறி வருகின்றனர். இதுதொடர்பாக அவர்கள் அரும்பாவூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். சம்பவத்தன்று அவர்கள் இளையராஜாவை தாக்கியும், கடையை அடித்து நொறுக்கி விட்டனராம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதே இடத்தில் இளையராஜா கடை வைத்து நடத்துவதற்கு நடத்த நடவடிக்கை எடுக்கவும், அடித்து நொறுக்கப்பட்ட கடையை சரி செய்யவும், தாக்கியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதனை வலியுறுத்துவதற்காக இளையராஜா குடும்பத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க பெட்ரோல், மண்எண்ணெய் கொண்டு வந்ததாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.


Next Story