மரத்தில் கார் மோதி விவசாயி பலி


மரத்தில் கார் மோதி விவசாயி பலி
x
தினத்தந்தி 22 Feb 2023 7:45 PM GMT (Updated: 22 Feb 2023 7:46 PM GMT)
நாமக்கல்

சேந்தமங்கலம்:-

சேந்தமங்கலம் அருகே மரத்தில் கார் மோதி விவசாயி பலியானார். மனைவி உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.

விவசாயி

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பேரூராட்சி காந்திபுரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 50). விவசாயி. இவர், நேற்று முன்தினம் தன்னுடைய மனைவி அருட்செல்வி (40), மகன் அஸ்வந்த் (17), மகள் அஸ்னிகா (15) ஆகியோருடன் பழனி கோவிலுக்கு சென்றார். காரை செந்தில்குமார் ஓட்டி சென்றார்.

பழனிக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர். கார் சேந்தமங்கலம் அருகே தாதம்பட்டி மேடு பகுதியில் வந்த போது திடீரென செந்தில்குமாரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற புளியமரத்தில் மோதியது.

இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. காரை ஓட்டிய செந்தில்குமார் இடுபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். அவருடைய மனைவி அருட்செல்வி உள்பட 3 பேரும் காயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவல் அறிந்த சேந்தமங்கலம் போலீசார் விரைந்து வந்து பலியான செந்தில்குமார் உடலை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அருட்செல்விக்கு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலும், அஸ்வந்த், அஸ்னிகா இருவருக்கும் நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விசாரணை

விபத்து குறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கார் மரத்தில் மோதி விவசாயி பலியானதுடன், அவருடைய மனைவி, மகன், மகள் காயம் அடைந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story