மரக்காணம் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி சாவு


மரக்காணம் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி சாவு
x
தினத்தந்தி 22 July 2023 6:45 PM GMT (Updated: 22 July 2023 6:45 PM GMT)

மரக்காணம் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி உயிாிழந்தாா்.

விழுப்புரம்

பிரம்மதேசம்,

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே நடுக்குப்பம் புதுக்குடி தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் மணிகண்டன் வயது (45), விவசாயி. இவருக்கு 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை மணிகண்டன் தனது நிலத்திற்கு அதே பகுதியை சேர்ந்த ஜெயபால் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு வழியாக சென்றார்.

அப்போது ஜெயபால் நிலத்தில் இருந்த தென்னை மரம் மேலே சென்ற உயர் மின்னழுத்த கம்பியில் உரசியபடி இருந்தது. இதைபார்க்காத மணிகண்டன் தென்னை மரத்தின் ஓலையை பிடித்துள்ளார். இதில் எதிர்பாராதவிதமாக மணிகண்டன் மீது மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

வாக்குவாதம்

இதுபற்றி தகவல் அறிந்த மரக்காணம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி கனகசெட்டிகுளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முயன்றனர். இதற்கிடையே இதுபற்றி அறிந்த மணிகண்டனின் உறவினர்கள் மற்றும் கிராமமக்கள் திரண்டு வந்து உடலை எடுக்க விடாமல் முற்றுகையிட்டு போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் கூறுகையில், உயரழுத்த மின்கம்பிகளில் படும் தென்னை ஓலையை அகற்ற நிலத்தின் உரிமையாளர் ஜெயபால் பலமுறை மின்வாரிய ஊழியர்களிடம் வலியுறுத்தி உள்ளார். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்காததாலும் மின்வாரிய ஊழியர்களின் அலட்சியப் போக்காலும் மணிகண்டன் உயிரிழந்து விட்டார். எனவே மின்வாரிய ஊழியர்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்தால் மட்டுமே உடலை எடுக்க விடுவோம் என தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் மணிகண்டனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கனகசெட்டிகுளத்தில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே மரக்காணம் தாசில்தார் பாலமுருகன், முருக்கேரி துணை மின் நிலைய துணை செயற்பொறியாளர் உள்ளிட்டோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.


Next Story