மோட்டார் சைக்கிள் விபத்தில் விவசாயி பலி


மோட்டார் சைக்கிள் விபத்தில் விவசாயி பலி
x

மயில் பறந்து வந்து மோதியதால் மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் விவசாயி பலியானார். மற்றொருவர் படுகாயமடைந்தார்.

புதுக்கோட்டை

மோட்டார் சைக்கிள்கள் மோதல்

விராலிமலை ஒன்றியம், விளாப்பட்டி அருகே உள்ள மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் முத்தையா. இவரது மகன் பால்ராஜ் (வயது 45). விவசாயியான இவர் நேற்று மாலை கீரனூர் விராலிமலை சாலையில் நால்ரோட்டில் இருந்து விராலிமலை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது சன்னாசி மலை என்ற இடத்தில் சென்ற போது திடீரென வனப்பகுதியில் இருந்து பறந்து வந்த மயில் ஒன்று பால்ராஜ் மீது மோதியுள்ளது. இதனால் நிலைகுலைந்த பால்ராஜ் எதிரே விராலிமலையில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்த திருச்சி மேல கல்கண்டார் கோட்டையை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் மீது மோதி விபத்திற்குள்ளானது.

விவசாயி பலி

இதில் பால்ராஜ், பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் சாலையில் விழுந்து படுகாயம் அடைந்துள்ளனர். இருவரையும் அப்பகுதியினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக விராலிமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பால்ராஜ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பன்னீர்செல்வம் மேல்சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story