விவசாயி வெட்டிக்கொலை; உடலை டீசல் ஊற்றி எரிக்க முயற்சி


விவசாயி வெட்டிக்கொலை; உடலை டீசல் ஊற்றி எரிக்க முயற்சி
x

விவசாயியை மர்ம நபர்கள் வெட்டிக்கொலை செய்து, உடலை டீசல் ஊற்றி எரிக்க முயற்சி செய்துள்ளனர்.

அரியலூர்

கீழப்பழுவூர்:

விவசாயி

அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அருகே உள்ள வாரணவாசி கிராமத்தை சேர்ந்தவர் மணி (வயது 63). விவசாயியான இவர் தனது தோட்டத்தில் கொட்டகை அமைத்து கால்நடைகள் வளர்த்து வருகிறார். இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இதில் முதல் மனைவி ராணிக்கு (55) ராஜேஷ் என்ற ஒரு மகனும், 2-வது மனைவி பிரேமாவுக்கு (50) பிரதீஷ் ராஜ் என்ற ஒரு மகனும் உள்ளனர். இவர்கள் கரையான்குறிச்சியில் எதிரெதிரே உள்ள வீடுகளில் வசித்து வருகின்றனர். தினமும் மாலை நேரத்தில் வாரணவாசி பிள்ளையார் கோவில் அருகே உள்ள தனது தோட்டத்துக்கு மணி செல்வது வழக்கம். அங்குள்ள அவருக்கு சொந்தமான நிலத்தில் தற்போது கடலை சாகுபடி ெசய்து வந்தார். அங்கு தண்ணீர் பாய்ச்சி விட்டு கால்நடைகளை அங்குள்ள கொட்டகையில் அடைத்து விட்டு இரவு 10 மணிக்கு மேல் அவர் வீடு திரும்புவார்.

பிணமாக கிடந்தார்

அதன்படி நேற்று முன்தினம் மாலை அவர் தோட்டத்திற்கு புறப்பட்டு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த 2-வது மனைவி பிரேமா, நேற்று அதிகாலை அவரது மகனுடன் தோட்டத்துக்கு சென்று பார்த்தார். அப்போது ஆட்டு கொட்டகை முன்பு மணி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இது குறித்து பிரேமா, கீழப்பழுவூர் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜீவ் காந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மணியின் உடலை கைப்பற்றி அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் துணை சூப்பிரண்டு சங்கர் கணேஷ் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார். தடயவியல் நிபுணர்கள் அங்கு வந்து தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் மூலம் துப்பு துலக்கப்பட்டது. மணி இறந்து கிடந்த இடத்தில் இருந்து ஓடிய மோப்ப நாய் சற்று தூரத்தில் நின்றுவிட்டது. அது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

வெட்டிக்கொலை

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மணியை மர்ம நபர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்ததும், அவரது உடலை டீசல் ஊற்றி எரிக்க முயன்றுள்ளதும் தெரியவந்தது. மேலும் அந்த கிராமத்தில் உள்ள அய்யனார் கோவில் உண்டியலை நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர்.இதனால் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் அந்த வழியாக தப்பிச்சென்றபோது, அவர்கள் ஆடு திருட வந்தவர்கள் என நினைத்து, அவர்களுடன் மணி தகராறு செய்து, அதன் காரணமாக மர்ம நபர்கள் மணியை வெட்டிக்கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சொத்து தகராறு காரணமா?

மேலும் மணி சமீபத்தில் தனது 2-வது மனைவிக்கு சொத்துகளை பாகப்பிரிவினை செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் சொத்து தகராறு காரணமாக மணி கொலை செய்யப்பட்டாரா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விவசாயி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story