பால் வேன் மோதி விவசாயி பலி


பால் வேன் மோதி விவசாயி பலி
x

எரியோடு அருகே பால் வேன் மோதி விவசாயி பரிதாபமாக இறந்தார். இதனையடுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

விவசாயி பலி

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே உள்ள நல்லமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 58). விவசாயி. நேற்று காலை இவர் எரியோடு அருகே தொட்டணம்பட்டியில், திண்டுக்கல் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது திண்டுக்கல்லில் இருந்து எரியோடு நோக்கி பால் ஏற்றி வந்த சரக்கு வேன், பழனிசாமி மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே பழனிசாமி பரிதாபமாக இறந்தார்.

உறவினர்கள் மறியல்

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பழனிசாமியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அங்கு திரண்டனர். விபத்து நடந்த இடத்தில் சாலை வளைவாக இருப்பதாகவும், எனவே அந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி அவர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் திண்டுக்கல்-எரியோடு சாலையில், கொட்டாம்பட்டி அருகே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த எரியோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலாயுதம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து மறியலை கைவிட்டு கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதற்கிடையே திண்டுக்கல்லை சேர்ந்த சரக்கு வேன் டிரைவர் விஜய் (20) மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story