வயல்களில் ஆடு, மாடு கிடை அமைக்க விவசாயிகள் ஆர்வம்


வயல்களில் ஆடு, மாடு கிடை அமைக்க விவசாயிகள் ஆர்வம்
x

வாய்மேடு பகுதியில் இயற்கை உரத்துக்காக வயல்களில் ஆடு, மாடு கிடை அமைக்க விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதன் மூலம் மண்ணின் வளத்தை பெருக்குவதற்கு விவசாயிகள் முயற்சி செய்து வருகிறார்கள்.

நாகப்பட்டினம்

வாய்மேடு:

ஒருபோக சாகுபடி

நாகை மாவட்டம் வாய்மேடு, ஆயக்காரன்புலம், மூலக்கரை, மருதூர், தென்னடார், தகட்டூர் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 15 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் உள்ளன.இங்கு ஆண்டுதோறும் மழையை நம்பி மட்டுமே ஒரு போக சம்பா சாகுபடி நடைபெறுவது வழக்கம். இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் பல ஆண்டுகளுக்கு முன்பு இயற்கை உரத்தையே வயலுக்கு பயன்படுத்தி வந்தனர். சமீபகாலமாக முற்றிலும் மாறுபட்டு செயற்கை உரங்களை பயன்படுத்தி அதிக மகசூல் பெற்றனர்.

மண் வளம்

நாளடைவில் ரசாயன உரங்கள் மண்ணுக்கு கேடு விளைவிக்கும் என்பதை உணர்ந்த விவசாயிகள் மீண்டும் பழையபடி இயற்கை உரத்துக்கு மாறி வருகிறார்கள். இயற்கை உரத்துக்காக வயல்களில் ஆடு, மாடுகளை கொண்டு கிடை போடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதன்மூலம் மண்ணின் வளத்தை பெருக்கவும் விவசாயிகள் முயற்சி செய்து வருகிறார்கள். இந்த பகுதியில் ஒரு ஏக்கர் நிலத்துக்கு 3 முறை மாடுகளையும், 2 முறை ஆடுகளையும் விவசாயிகள் கிடை போட்டு வருகிறார்கள்.பெரும்பாலான விவசாயிகள் இயற்கை உரத்துக்கு மாறுவதால் தரமான உணவு தானியங்கள் கிடைக்கும் என இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.


Next Story