விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் வாபஸ்


விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் வாபஸ்
x

திசையன்விளையில் 18-ந் தேதி நடைபெற இருந்த விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

திருநெல்வேலி

திசையன்விளை:

தாமிரபரணி வெள்ளநீர் கால்வாய் திட்டப்பணிகளை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற அரசை வலியுறுத்தி திசையன்விளை சுற்றுவட்டார விவசாயிகள் சங்கம் சார்பில் வருகிற 18-ந் தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதை தொடர்ந்து திசையன்விளை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் முருகன் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது. பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள் அண்ணாதுரை, திருமலைக்குமார், பழனிவேல், உதவி செயற்பொறியாளர் பேச்சிமுத்து, திசையன்விளை சுற்றுவட்டார விவசாயிகள் சங்க தலைவர் ராஜன், செயலாளர் கணேசன், பொருளாளர் ரவீந்திரன், நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார், நகர தி.மு.க. செயலாளர் கென்னடி மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் தாமிரபரணி, கருமேனியாறு மற்றும் நம்பியாறு இணைப்பு திட்ட வெள்ளநீர் கால்வாய் பணிகள் மற்றும் பல்வேறு நிலையில் உள்ள பணிகள் முன்னேற்றம் குறித்து விவசாயிகளிடம் விவாதிக்கப்பட்டது. மேலும் வெள்ளநீர் கால்வாய் திட்டப்பணிகளை வரும் மழை காலத்திற்குள் முடித்து தண்ணீர் கொண்டு செல்வதற்கு உறுதிசெய்யும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் விவசாயிகளிடம் உறுதியளித்தனர். இதனை ஏற்ற விவசாயிகள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.


Next Story