100 சதவீத மானியத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர்


100 சதவீத மானியத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர்
x

ஆழ்துளை கிணறு அமைக்க 100 சதவீத மானியம் வழங்கப்படுவதால் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் சமுதாயத்தை சோ்ந்த விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம்

100 சதவீத மானியத்தில்

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் பாசனநீர் ஆதாரங்களை புதிதாக உருவாக்கி அதிக பரப்பில் சாகுபடி மேற்கொண்டு விவசாயிகள் அதிக விளைச்சல் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆதி திராவிட பழங்குடியின விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து 2021-2022 -ம் ஆண்டில் ரூ.12 கோடி செலவில் மின் மோட்டாருடன் நுண்ணீர் பாசனவசதி அமைத்து தரப்படும் என வேளாண் துறை அமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்தார்.

அதன் அடிப்படையில் தமிழ்நாட்டின் 8 மாவட்டங்களில் பாசனநீர் வசதி இல்லாத இடங்களில் 200 சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில், நிலத்தடி நீர்பாதுகாப்பான குறுவட்டங்களில் வோளாண்மை என்ஜினீயரிங் துறை மூலம் செயல்படுத்திட ஆணை பிறப்பித்து பணிகள் நடைபெற்று வருகிறது.

சூரிய சக்தி மூலம் இயக்கப்படும் பம்புசெட்

இந்த நிலையில், தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் உள்ள நிலத்தடி நீர் பாதுகாப்பாக உள்ள குறுவட்டங்களில் கூடுதலாக 200 ஆதிதிராவிட, பழங்குடியின பிரிவை சேர்ந்த சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் இந்த திட்டத்தை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையினரால் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் 2021-2022-ம் ஆண்டு பணி மேற்கொள்ள தேர்வு செய்யப்பட்ட 1997 பஞ்சாயத்து கிராமங்களில் உள்ள பாதுகாப்பான குறுவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

இந்த திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு உரிய வருவாய் துறையின் மூலம் வழங்கப்பட்ட ஜாதிசான்று பெற வேண்டும். சாத்தியமுள்ள இடங்களில் சூரிய சக்தி மூலம் இயக்கப்படும் பம்புசெட் (அதிக பட்சம் 10 குதிரை திறன் வரை) அமைத்திடவேண்டும்.

சம்பந்தப்பட்ட பாதுகாப்பான குறுவட்டங்களில் உள்ள பயனாளிகள் செயற்பொறியாளர் நந்தனம் மற்றும் உதவி செயற்பொறியாளர் காஞ்சீபுரம் அலுவலகங்களை அணுகலாம்.

இந்த திட்டத்தின்கீழ் இடத்திற்கு ஏற்றவாறு, குழாய் கிணறு அல்லது ஆழ்துளை கிணறு அமைத்தல், நீரினை இறைப்பதற்கு மின்சார சக்தி மூலம் / சூரியசக்தி மூலம் இயங்கக்கூடிய பம்புசெட்டுகள் நிறுவுதல், பாசன நீரை வீணாக்காமல் சாகுபடி செய்யப்படும் வயலுக்கு அருகில் கொண்டு செல்வதற்கு பாசனநீர் குழாய்கள் நிறுவுதல் மற்றும் நுண்ணீர் பாசன அமைப்புகளை நிறுவுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த திட்டம் பிரதம மந்திரி நீர்ப்பாசன் திட்டம் ஒவ்வொரு வயலுக்கும் நீர் - நிலத்தடி நீர்ப்பாசனத்திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி செயல்படுத்தப்படும்.

நிர்ணயிக்கப்பட்ட ஆழத்திற்கும் அதிகமாக

அரசால் நிர்ணயிக்கப்பட்ட ஆழத்திற்கும் அதிகமாக கிணறு அமைக்கவேண்டும் என்றாலோ அல்லது கூடுதல் குதிரைத்திறன் கொண்ட பம்புசெட்டுகள் நிறுவ வேண்டும் என்றாலோ, அதற்கான கூடுதல் செலவை சம்பந்தப்பட்ட விவசாயிகளே ஏற்று கொள்ள வேண்டும்.

சிறு மற்றும் குறு விவசாயிகளாக உள்ள ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகள் பயன்பெறும் வகையில், பாசன அமைப்புகளை உருவாக்கி தங்களது நிலத்தில் சாகுபடியை மேற்கொள்ள வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில், தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ள இந்த திட்டத்தை காஞ்சீபுரம் மாவட்ட வேளாண் பெருமக்கள் பயன்படுத்திட காஞ்சீபுரம் மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தை அணுகலாம்.

காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் செயற்பொறியாளர் 487, அண்ணாசாலை, நந்தனம், சென்னை-35., 2) உதவி செயற்பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் விரிவாக்க மையம், பஞ்சுப்பேட்டை, காஞ்சீபுரம் - 631 502 என்ற முகவரில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story