சூரியமயமாக்கல் திட்டத்தில் மின் இணைப்பு பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்


சூரியமயமாக்கல் திட்டத்தில் மின் இணைப்பு பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 18 Oct 2023 7:00 PM GMT (Updated: 18 Oct 2023 7:04 PM GMT)

விவசாய மின் இணைப்பு கோரி விண்ணப்பித்துள்ளவர்கள் பிரதம மந்திரியின் சூரிய மயமாக்கல் திட்டத்தின் கீழ் மின் இணைப்பு பெற விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை


பிரதம மந்திரி திட்டம்

சிவகங்கை மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் குருசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- பிரதம மந்திரியின் சூரிய மயமாக்கல் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் முன்னோடி திட்டமாக சூரிய சக்தி மூலம் இயங்கக்கூடிய 7.5 எச்.பி. வரை மின்பளு உள்ள மோட்டார் பம்பு செட்டுகளுக்கு மட்டும் தமிழ்நாடு முழுவதும் 5 ஆயிரம் எண்ணிக்கையில் விவசாய மின் இணைப்பு வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் சூரிய சக்தி மின் பலகை அமைக்க ஆகும் செலவில் 30 சதவீதம் மத்திய அரசு, 30 சதவீதம் மாநில அரசின் மானியமாகவும், 10 சதவீதம் நுகர்வோரின் பங்காகவும் மீதி உள்ள 30 சதவீதம் வங்கிகளின் நிதி உதவியுடன் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

ஊக்கத்தொகை

சூரிய சக்தி மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தை ஒரு யூனிட்டுக்கு ரூ.2.28 வீதம் நிதி உதவி வழங்கிய வங்கி கணக்கில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செலுத்தி விடும். மேலும் சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி செய்து மின் தொகுப்பில் ஏற்றுமதி செய்யும் ஒவ்வொரு யூனிட் மின்சாரத்திற்கும் விவசாயிக்கு 50 பைசா வீதம் ஊக்கத்தொக வழங்க தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தினால் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் செயல்படுத்துவதன் மூலம் விவசாய உற்பத்தி பெருகுவதோடு மின்பாதையில் ஏற்படும் மின் இழப்பும் பெருமளவு குறையும். அத்துடன் தரமான மின்சாரம் கிடைக்க வழிவகை ஏற்படும்.

விண்ணப்பிக்கலாம்

எனவே, இந்த திட்டத்தின் கீழ் 7.5 எச்.பி. வரை மின் பளு உள்ள மோட்டார் பம்பு செட்டுகளுக்கு மட்டும் விவசாய மின் இணைப்பு வேண்டி தட்கல் திட்டத்தில் ரூ.25 ஆயிரம் மற்றும் சுயநிதி திட்டத்தில் ரூ.50 ஆயிரம் மற்றும் சாதாரண முன்னுரிமை திட்டம் ஆகிய திட்டங்களில் பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் பகுதி செயற்பொறியாளரை அணுகி விருப்ப கடிதத்தை அளித்து பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story