விழுப்புரம் மாவட்டத்தில் பாரம்பரிய நெல் விதைகளை சாகுபடி செய்து விவசாயிகள் பயனடையலாம்-கலெக்டர் பழனி தகவல்


விழுப்புரம் மாவட்டத்தில் பாரம்பரிய நெல் விதைகளை சாகுபடி செய்து விவசாயிகள் பயனடையலாம்-கலெக்டர் பழனி தகவல்
x
தினத்தந்தி 12 Oct 2023 6:45 PM GMT (Updated: 12 Oct 2023 6:46 PM GMT)

விழுப்புரம் மாவட்டத்தில் பாரம்பரிய நெல் விதைகளை சாகுபடி செய்து விவசாயிகள் பயனடையலாம் என்று கலெக்டர் பழனி கூறியுள்ளார். 

விழுப்புரம்

தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாத்து மீட்டெடுக்கவும், பாரம்பரிய நெல் வகைகளின் மருத்துவ முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின்கீழ் நெல் ஜெயராமன் மரபுசார் நெல் ரகங்களின் பாதுகாப்பு இயக்கத்தின்கீழ், பாரம்பரிய நெல் ரக விதைகள் வேளாண்மைத்துறை மூலம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் ரக விதைகள் வினியோகம் செய்திட ஏதுவாக, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் நெல் பாரம்பரிய ரகங்களான ஆத்தூர் கிச்சிலி சம்பா, சீரகசம்பா, செங்கல்பட்டு சிறுமணி இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு விற்பனை விலையான கிலோ ஒன்றுக்கு ரூ.50-ல் 50 சதவீத அரசு மானியத்தில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

விவசாயி ஒருவருக்கு ஏக்கர் ஒன்றுக்கு அதிகபட்சமாக 10 கிலோ வரை அரசு மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

எனவே விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அருகில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி பாரம்பரிய நெல் ரகங்களை பெற்று சாகுபடி செய்து பயனடையலாம் என மாவட்ட கலெக்டர் சி.பழனி தெரிவித்துள்ளார்.


Next Story