விவசாயி சாவில் மர்மம் நீடிப்பு


விவசாயி சாவில் மர்மம் நீடிப்பு
x
தினத்தந்தி 23 Oct 2022 7:45 PM GMT (Updated: 23 Oct 2022 7:45 PM GMT)

வாழப்பாடி அருகே விவசாயி சாவில் மர்மம் நீடிக்கிறது. மேலும் தடயவியல் நிபுணர்கள் சோதனை நடத்தினர்.

சேலம்

வாழப்பாடி:-

வாழப்பாடி அருகே விவசாயி சாவில் மர்மம் நீடிக்கிறது. மேலும் தடயவியல் நிபுணர்கள் சோதனை நடத்தினர்.

விவசாயி

வாழப்பாடி அருகே பெரியகுட்டிமடுவு பகுதிைய சேர்ந்தவர் பெருமாள் (வயது 60). விவசாயி. இவர் நேற்று மாலை 4 மணி அளவில் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் வாழப்பாடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஆனால் அதற்கு பெருமாளின் உடலை அவரது உறவினர்கள் எரித்து விட்டனர்.

தொடர்ந்து போலீசார் பெருமாளின் மனைவி, மகன்கள், மகள்களிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் மாடு மேய்க்க அருகில் உள்ள வனப்பகுதிக்கு சென்ற பெருமாள் திடீரென்று இறந்து விட்டனர் என்றும், சனிக்கிழமை என்பதால் உடலை எரித்து விட்டோம் என்றும் தெரிவித்தனர். இதனிடையே பெருமாள் சுட்டுக்கொல்லப்பட்டாரா? அல்லது அவரது சாவுக்கு ேவறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற விவரம் தெரியாததால், மர்மம் நீடிக்கிறது.

தடயவியல் நிபுணர்

மேலும் பெரியகுட்டி மடுவு விவசாயி பெருமாள் சாவில் மர்மம் இருப்பதாக கிராம நிர்வாக அலுவலர் (பொறுப்பு) அண்ணாமலை வாழப்பாடி போலீசில் புகார் அளித்துள்ளார். இதன் பேரில் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சேலம் தடயவியல் துறை துணை இயக்குனர் செந்தில்குமார் தலைமையிலான குழுவினர் நேற்று பெருமாள் உடல் எரிக்கப்பட்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். உடல் முழுவதும் எரிந்த நிலையில் சாம்பல் பகுதியில் ஏதேனும் தடயம் உள்ளதா? என ஆய்வு செய்தனர். மேலும் வாழப்பாடி இன்ஸ்பெக்டர் உமாசங்கர் தலைமையிலான போலீசார் பெருமாள் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் பெருமாள் சாவில் எங்களுக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. நீங்கள் ஏன்? தொடர்ந்து வந்து எங்களை தொந்தரவு செய்கிறீர்கள். நாங்கள் உயிரோடு இருப்பதா? வேண்டாமா? என்று போலீசாரை கேட்டதால் அதிர்ச்சி அடைந்தனர்‌. எனினும் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story