சட்டிருட்டி வடிகால் தூர்வாரப்படுமா?- விவசாயிகள்


சட்டிருட்டி வடிகால் தூர்வாரப்படுமா?- விவசாயிகள்
x
தினத்தந்தி 10 Dec 2022 7:00 PM GMT (Updated: 10 Dec 2022 7:00 PM GMT)

மன்னார்குடி சட்டிருட்டி வடிகால் தூர்வாரப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.

திருவாரூர்

மன்னார்குடி சட்டிருட்டி வடிகால் தூர்வாரப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.

சட்டிருட்டி வடிகால்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சி பகுதியில் முக்கிய வடிகாலாக சட்டிருட்டி வடிகால் உள்ளது. இந்த வடிகால் நெடுவாக்கோட்டை புது ஆற்றில் தொடங்கி காளவாய்க்கரை கே.கே.நகர், ஜீயர் தோப்பு, ருக்மணி குளம், தென்கரை தாயார் நகர், அந்தோணியார் நகர், பாரதியார் நகர், கான்வென்ட் மேல்புரம், தாமரைக் குளம் மேல் கரை வழியாக சென்று பாமணி ஆற்றில் கலக்கிறது. சட்டுருட்டி வடிகாலின் மொத்த தூரம் 5 கிலோ மீட்டர் ஆகும்.

வடிகாலில் கே.கே. நகரில் இருந்து பாரதிதாசன் நகர் வரை ஆகாயத்தாமரை மற்றும் புதர்கள் மண்டி உள்ளன. இவற்றை அகற்றி தூர்வாரி வடிகாலில் உள்ள கழிவுநீரை வெளியேற்ற வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.

கழிவுநீர் தேக்கம்

இதுகுறித்து ருக்மணி குளம் தென்கரை பகுதியில் வசிக்கும் பார்த்திபன் கூறியதாவது:- காளவாய்க்கரை, கே.கே.நகர், ஜீயர் தோப்பு, ருக்மணி குளம் தென்கரை, தாயார் நகர், அந்தோணியார் நகர், பாரதியார் நகர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட நகர் பகுதியில் 1,000 குடும்பங்கள் வசித்து வருகிறார்கள்.

இந்த பகுதியில் இருந்து வரும் கழிவுநீர் மற்றும் மழைநீர் சட்டிருட்டி வடிகாலில் வடிகிறது. ஆனால் இந்த வடிகால் தற்போது தூர்ந்து விட்டது. வடிகாலில் புதர்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. மேலும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது.

தூர்வார நடவடிக்கை

இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி வடிகால் அருகில் வசிப்பவர்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். தற்போது மழைக்காலமாக இருப்பதால் டெங்கு போன்ற நோய்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சுகாதாரத் துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் சட்டிருட்டி வடிகாலை நேரில் பார்வையிட்டு அதில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாரி, கரையை உயர்த்தி பலப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story