காலி சாக்குகளை காட்டி விவசாயிகள் கோரிக்கை: மூட்டைக்கு '50 கிலோ' நெல் கொள்முதல் செய்ய வேண்டும் அமைச்சர்கள் பங்கேற்ற முத்தரப்பு கூட்டத்தில் வலியுறுத்தல்


காலி சாக்குகளை காட்டி விவசாயிகள் கோரிக்கை:  மூட்டைக்கு 50 கிலோ நெல் கொள்முதல் செய்ய வேண்டும்  அமைச்சர்கள் பங்கேற்ற முத்தரப்பு கூட்டத்தில் வலியுறுத்தல்
x

மூட்டைக்கு 50 கிலோ நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று தஞ்சையில் அமைச்சர்கள் பங்கேற்ற முத்தரப்பு கூட்டத்தில் விவசாயிகள் காலி சாக்குகளை காட்டி வலியுறுத்தினர்.

தஞ்சாவூர்

மூட்டைக்கு 50 கிலோ நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று தஞ்சையில் அமைச்சர்கள் பங்கேற்ற முத்தரப்பு கூட்டத்தில் விவசாயிகள் காலி சாக்குகளை காட்டி வலியுறுத்தினர்.

முத்தரப்பு கூட்டம்

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் சம்பா நெல் கொள்முதல் தொடர்பான முத்தரப்பு கூட்டம் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-

தோழகிரிப்பட்டி கோவிந்தராஜ்:- வேளாண் இடுபொருட்கள் விலை 10 மடங்கு உயர்ந்துள்ளது. எனவே நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.2,500 ஆக உயர்த்த வேண்டும்.

கொள்முதலுக்கு தனி கொள்கை

ராயமுண்டான்பட்டி ஜீவக்குமார்:- தமிழகத்தில் நெல் உற்பத்தி பெருகி வருகிறது. எனவே தமிழக அரசு நெல் கொள்முதலுக்கு சிறப்பு கொள்கையை ஏற்படுத்த வேண்டும். வருகிற சம்பா பருவத்தில் கொள்முதல் நிலையங்களில், நெல் மூட்டைகள் தேக்கமடையாமல் உடனடியாக இயக்கம் செய்ய வேண்டும். கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆண்டு பயிர் காப்பீடு தஞ்சை மாவட்டத்தில் 856 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் செய்திருந்தனர். இதில் 7 கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு மட்டும் இழப்பீடு கிடைக்கப்பெற்றுள்ளது. இது எந்த வகையில் நியாயம் என தெரியவில்லை. ஈரப்பதத்தை டிஜிட்டல் மீட்டர் மூலம் கணித்து தளர்வுகளை உடனுக்குடன் அறிவிக்கவேண்டும்.

பட்டுக்கோட்டை வீரசேனன்:- தற்போது வடமாநிலத்தவர் நடவு, அறுவடை பணிகள், கட்டிட வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களை கொள்முதல் நிலையத்திலும் நியமிக்க வேண்டும். ஒவ்வொரு 40 கிலோ மூட்டைக்கும் 2 கிலோ கூடுதலாகவும், மூட்டைக்கு ரூ.50 லஞ்சமாக தர வேண்டி இருப்பதால் விவசாயிகளுக்கு பெரிய அளவில் இழப்பு ஏற்படுகிறது. கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு 50 கிலோ கொள்முதல் செய்ய வேண்டும்.

நிரந்தர அரசாணை

சுவாமிமலை சுந்தரவிமலநாதன்:- சம்பா, தாளடியில் அறுவடையின் போது மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தற்போது தகவல் வெளியிட்டுள்ளது. எனவே, 19 சதவீதமாக உள்ள நெல் ஈரப்பதத்தை அதிகரித்து மத்திய அரசிடம் இருந்து நிரந்தரமாக அரசாணையை பெற்றுத்தர வேண்டும். வேளாண் வணிகத்துறை மூலம் நெல் '75 கிலோ' எடையில் ஒரு மூட்டை கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும், உரங்கள் உள்ளிட்ட நவதானியங்கள் 50 கிலோவுக்கு மேல் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் மட்டும் 40 கிலோ எடையில் நெல் மூட்டை கொள்முதல் செய்யப்படுவது எந்த விதத்தில் நியாயம்?

இவ்வாறு அவர்கள் கூறினர்.

வருகிற சம்பா கொள்முதலில் 50 கிலோ கொண்ட மூட்டையாக நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். கொள்முதல் நிலையங்களில் மழையில் பாதிக்காமல் இருக்க விவசாயிகளுக்கு மானிய விலையில் தார்ப்பாய் வழங்க வேண்டும். தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறியப்படி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 விலையை அறிவிக்க வேண்டும் என பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த விவசாயிகளும் கூட்டத்தில் வலியுறுத்தினர்.

சாக்குகளை காட்டினர்

மேலும், கூட்டத்தில் விவசாயிகள் சில் 50 கிலோ எடை கொண்ட உர சாக்குகள், 75 கிலோ எடை கொண்ட சாணல் சாக்குகளை அமைச்சர்களிடம் காட்டி தங்களின் கோரிக்கையை முன்வைத்தனர்.

பின்னர், அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது, 'கொள்முதல் செய்யும்போது மழையில் நெல் பாதிக்காத வகையில், மேற்கூரையுடன் கூடிய சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்பட்டு வருகிறது. கொள்முதல் செய்யப்படும் நெல்லை உடனடியாக அரவைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொள்முதல் தொடர்பான புகார்களை விவசாயிகள் அதற்கான கட்டணமில்லா தொலைப்பேசியில் புகார் அளித்தால் சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.


Next Story