கரும்பு நிலுவை தொகையை தாமதமின்றி வழங்க விவசாயிகள் கோரிக்கை


கரும்பு நிலுவை தொகையை தாமதமின்றி வழங்க விவசாயிகள் கோரிக்கை
x

கரும்பு நிலுவை தொகையை தாமதமின்றி வழங்க வேண்டும் என கீழ்பென்னாத்தூரில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

திருவண்ணாமலை

கீழ்பென்னாத்தூர்

கரும்பு நிலுவை தொகையை தாமதமின்றி வழங்க வேண்டும் என கீழ்பென்னாத்தூரில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் வட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் தாசில்தார் சாப்ஜான் தலைமையில் நடந்தது. தோட்டக்கலை உதவி இயக்குனர் அமுல் சேவியர் பிரகாஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், வட்ட வழங்கல் அலுவலர் மணிகண்டன், பேரூராட்சி செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலைவகித்தனர்.

இதில் விவசாய சங்க பிரதிநிதிகள் முத்தகரம் பழனிசாமி, வயலூர் சதாசிவம், வேட்டவலம் மணிகண்டன், இயற்கை விவசாயி கிருஷ்ணன், நீலந்தாங்கல் பாரதியார் உள்பட விவசாயிகள் பலரும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-

கரும்பு நிலுவைத் தொகையினை காலம் தாழ்த்தாமல் உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொலக்குணத்தில் பக்க கால்வாய் அமைக்கவும், சாலையோர முட்புதர்கள் மண்டியிருப்பதை அகற்ற வேண்டும்.

மின்சார டிரான்ஸ்பார்மர் பழுதடைந்தால் அதற்கான செலவினத்தை விவசாயிகளிடம் வசூலிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேட்டவலம்-அகரம் செல்லும் சாலையில் ஏரிக்கு நீர்வரும் பாதையை ஆக்கிரமிப்பு செய்துஉலர் களம் அமைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேற்கண்டவை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி விவசாயிகள் பேசினர். விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பதில் அளித்தனர்.


Next Story