கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை


கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
x
தினத்தந்தி 13 Feb 2023 6:45 PM GMT (Updated: 13 Feb 2023 6:45 PM GMT)

கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தகுறை தீர்ப்பு முகால் கோரிக்கைகளுடன் வந்த விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோயம்புத்தூர்

கோவை,

கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தகுறை தீர்ப்பு முகால் கோரிக்கைகளுடன் வந்த விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

குறை தீர்ப்பு முகாம்

கோவை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி கலெக்டர் அலுவலக வாசல் முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் நின்றிருந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் பொது மக்களின் உடைமைகளை சோதனை செய்து அனுப்பி வைத்தனர். கலெக்டர் கிராந்தி குமார் பாடி மக்களிடம் இருந்து மனுக்களை பெற்று கொண்டார்.அப்போது அன்னூரை சேர்ந்த விவசாயிகள் 500-க்கும் மேற்பட்டோர் கோரிக்கைகளுடன் கோவை கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையொட்டி போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை மனுவாக அளிக்க கூறினர்.

இதையடுத்து அவர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- தமிழக அரசு கடந்த 2006-ம் ஆண்டு நிலமற்ற விவசாய தொழிலாளர்கள் 5 லட்சம் பேருக்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் இரண்டு ஏக்கர் நிலம் வழங்கப்படும் என அறிவித்தது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு கடந்த வாரம் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின நிலமற்ற விவசாய தொழிலாளர்கள் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் உதவி தொகையாக நிலம் வாங்குவதற்கு வழங்குவதாக அறிவித்தது.எனவே அன்னூர் வட்டம், அக்கரை, செங்கப்பள்ளி கிராமத்தில் உள்ள இடங்களை எங்களுக்கு வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

விவசாயிகள் போராட்டம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோவை கலெக்டர் அலுவலகதுக்கு வந்தனர். அவர்கள் வாழைத்தார், தென்னை குருத்து, மட்டை ஆகியவற்றுடன் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் சு.பழனிசாமி கூறியதாவது:-

இருகூர் பேரூராட்சி பகுதியில் விவசாய நிலத்துக்கு அருகே சில தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் இடத்தை வாங்கி வீட்டு மனைகளாக பிரித்து விற்பனை செய்ய முயற்சித்து வருகின்றனர். அதற்காக 30 அடி உள்ள சாலையை விரிவுபடுத்த முடிவு செய்து விவசாய நிலங்களை கையகப்படுத்த முயற்சி நடந்து வருகிறது. இதற்காக தென்னை மரங்களை வெட்ட வேண்டும் என்று மரங்களில் அம்புக்குறியிட்டு சென்றுள்ளனர். ஆகவே சாலையை விரிவு படுத்த முயற்சிக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

பார்க்கிங் வசதி

இந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் அளித்த மனுவில், கோவை குண்டு வெடிப்பில் இருந்தவர்களுக்கு நினைவுத்தூண் அமைக்க வேண்டும் என மாதிரி தூணுடன் வந்து மனு அளித்தனர்.

கோவை பீளமேட்டை சேர்ந்த மாநகராட்சி கவுன்சிலர் சித்ரா வெள்ளியங்கிரி அளித்த மனுவில், பீளமேடு ரெயில் நிலையத்தில், தினசரி மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு ரெயிலில் சென்று வரும் மாணவர்களுக்கு வசதியாக பார்க்கிங் வசதியைஏற்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.


Next Story