பண்ணையம் அமைக்கும் விவசாயிகள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்


பண்ணையம் அமைக்கும் விவசாயிகள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 27 July 2023 6:45 PM GMT (Updated: 27 July 2023 6:46 PM GMT)

தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கத்தின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க விவசாயிகள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விருதுநகர்

தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கத்தின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க விவசாயிகள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

பண்ணைய திட்டம்

ஒருங்கிணைந்த பண்ணைய திட்டமானது விவசாயிகள் தங்களிடம் இருக்கின்ற இயற்கை வளங்களை மேம்படுத்தி உரிய முறையில் வளங்களை பயன்படுத்தவும், பயிர் சாகுபடி முறையில் அதிகபட்ச உற்பத்திக்கான நுட்பங்களை பயன்படுத்தவும், பண்ணை வழிவகைகளை உற்பத்தி நோக்கங்களுக்காக மறு சுழற்சி செய்யவும் கால நிலை மற்றும் சமூக பொருளாதார நிலைக்கு ஏற்றவாறு பால் மாடு, கோழி, தேனீ வளர்ப்பு போன்ற கலவையான செயல்பாடுகள் மூலம் ஆண்டு முழுவதும் நிலையான வருமானம் கிடைக்க வழி செய்கிறது.

2023-2024-ம் ஆண்டுக்கான தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்க திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணைய அமைப்பை விருதுநகர் மாவட்டத்தில் செயல்படுத்திட ரூ.15 கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பயனாளிகள் தேர்வு

இதற்காக வேளாண்மை துறை மூலம் 500 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு பயனாளியாக இணைக்கப்படுவர். இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் குறைந்தது 1 ஏக்கர் நில உரிமை உடையவராக இருக்க வேண்டும். மேலும் தனது சொந்த செலவில் ரூ.60 ஆயிரம் மதிப்பில் வேளாண்மை இனங்களான பயிர் செயல் விளக்கத்திடல், மண்புழு உர தொட்டி மற்றும் கால்நடை இனங்களான கறவை மாடு அல்லது 10 ஆடுகள் மற்றும் தோட்டக்கலை இனங்களான பழ மரக்கன்றுகள், தேனீ வளர்ப்பு பெட்டி போன்றவற்றை திட்ட வழிகாட்டுதலின்படி அமைக்க வேண்டும்.

இவ்வாறு ரூ.60 ஆயிரம் மதிப்பில் ஒருங்கிணைந்த பண்ணையத்தை உருவாக்கிய விவசாயிகளுக்கு பின்னேற்பு மானியமாக ரூ.30 ஆயிரம் வழங்கப்படும். எனவே விருதுநகர் மாவட்ட விவசாயிகள் உழவன் செயலி மூலம் பதிவு செய்து அல்லது தங்கள் பகுதி வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலரை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். மேலும் தமிழக அரசின் சிறப்பினமாக இத்திட்டத்தில் தேர்வாகும். ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின சிறுகுறு விவசாயிகளுக்கு மட்டும் கூடுதலாக ரூ.12ஆயிரம் மானியம் சேர்த்து ரூ.42 ஆயிரம் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story