விவசாயிகள், ஆதார் விவரங்களை 30-ந் தேதிக்குள் புதுப்பிக்க வேண்டும்


விவசாயிகள், ஆதார் விவரங்களை 30-ந் தேதிக்குள் புதுப்பிக்க வேண்டும்
x

விவசாயிகள், ஆதார் விவரங்களை 30-ந் தேதிக்குள் புதுப்பிக்க வேண்டும் என வேளாண் இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் அ.பாலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் நிலம் உள்ள விவசாயிகள் வேளாண் இடுபொருட்களை வாங்கும் வகையில் 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம், ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் தங்கள் ஆதார் விவரங்களை சரி செய்தால் மட்டுமே, திட்டத்தின் அடுத்த தவணைத்தொகையைப் பெற முடியும்.

பி.எம்.கிசான் நிதித்திட்டத்தில் பயன்பெற்று வரும் விவசாயிகள், ஆதார் எண்ணுடன் செல்போன் எண்ணை ஏற்கனவே இணைத்துள்ளவர்கள் www.pmkisan.gov.in என்ற இணையதளத்தில் தங்களின் ஆதார் எண் விவரத்தினை உள்ளீடு செய்தால் தங்களது செல்போனுக்கு வரும் ஓ.டி.பி. எண்ணை உள்ளீடு செய்து ஆதார் விவரங்களை சரிபார்த்து உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

இதுநாள் வரை ஆதார் எண்ணுடன் செல்போன் எண்ணை இணைக்காத விவசாயிகள் அருகில் உள்ள பொதுசேவை மையங்களுக்கு சென்று ரூ.15 செலுத்தி பி.எம்.கிசான் திட்ட இணையதளத்தில் ஆதார் விவரங்களைப் பதிவு செய்யலாம்.

விவசாயிகள் தங்கள் பகுதி அஞ்சல் அலுவலகம் மூலமும், ஆதார் எண்ணுடன் செல்போன் எண்ணை இணைத்து விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம். இத்திட்டத்தில் நிதி உதவி பெற்று வரும் விவசாயிகள் தங்கள் வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியதும் அவசியமாகும். எனவே வருகிற 30-ந் தேதிக்குள் விவசாயிகள் தங்கள் பதிவைப் புதுப்பித்து தொடர்ந்து உதவித்தொகை கிடைப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story