விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்


விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
x

திருவேங்கடத்தில் பயிர் காப்பீட்டு தொகை வழங்கக்கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

தென்காசி

திருவேங்கடம்:

தென்காசி மாவட்டம் திருவேங்கடம், சங்கரன்கோவில் தாலுகாக்களில் கடந்த 2020, 2021-ம் ஆண்டில் விவசாயிகள் தங்களது நிலங்களில் மக்காச்சோளம், உளுந்து, பாசிப்பயறு, பருத்தி மற்றும் சிறுதானியங்களை பயிரிட்டு இருந்தனர். அப்போது பயிர்கள் நன்றாக விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், தொடர் மழையின் காரணமாக அவை சேதம் அடைந்தன.

இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு சார்பாக அழிந்துபோன பயிர்களுக்கு இடைக்கால நிவாரணமாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்பட்டது. ஆனால் இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில் இன்னும் காப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை.

இதனால் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பாக விவசாயிகள் ஏராளமானோர் நேற்று திருவேங்கடம் தாலுகா அலுவலகம் முன்பாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து விவசாய சங்க பிரதிநிதிகளை அழைத்து தாலுகா அலுவலகத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இதில், தென்காசி மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பாலசுப்பிரமணியன், வேளாண்மை துறை இணை இயக்குனர் தமிழ்மலர், தாசில்தார் ரவீந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பையா, இன்ஸ்பெக்டர் சக்திவேல, விவசாயிகள் சங்க மாநில தலைவர் நாராயணசாமி, துணைத்தலைவர் நம்பிராஜன், தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் சுப்பாராவ், வக்கீல்கள் சீனிவாசன், ராகவன் உள்ளிட்டோர் கலந்து ெகாண்டனர்.

அதில் வருகிற 6-ந் தேதி திருவேங்கடம் தாசில்தார் அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பயிர் காப்பீட்டு நிறுவன மேலாளர், புள்ளியல் துறையினர், வருவாய் துறையினர், காவல் துறையினர் ஆகியோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.



Next Story