முதியவரை கொலை செய்த தந்தை, மகனுக்கு ஆயுள் தண்டனை


முதியவரை கொலை செய்த வழக்கில் தந்தை, மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

கோயம்புத்தூர்

கோவை

முதியவரை கொலை செய்த வழக்கில் தந்தை, மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

பன்றி இறைச்சி வியாபாரி

கோவையை அடுத்த கோவில்பாளையம் அருகே செங்காட்டை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 72). இவர் அக்ரஹார சாமக்குளம் பகுதியில் புதிதாக வீடு கட்டி வந்தார்.

அதன் அருகே பன்றி இறைச்சி வியாபாரி ராமசாமி (75) என்பவர் வசித்து வருகிறார். மேலும் அவர் வீட்டின் அருகே பன்றி இறைச்சி கடை நடத்தினார்.

இந்த நிலையில் தனக்கு சொந்தமான இடத்தை பழனிசாமி ஆக்கிரமித்து வீடு கட்டி வருவதாக ராமசாமி புகார் கூறி வந்தார். மேலும் பழனிசாமி வீடு கட்ட ரோட்டோரத்தில் மணல் கொட்ட கூடாது என்று ராமசாமி கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த பழனிச்சாமி, ராமசாமியை மண் வெட்டியால் அடிக்க வந்ததாக கூறப்படுகிறது. இது பற்றி ராமசாமி தனது மகன் ஏசுகுமாரிடம் (35) கூறியுள்ளார்.

முதியவர் கொலை

இந்த நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் 12-ந் தேதி ராமசாமியும், அவருடைய மகன் ஏசுகுமாரும் சேர்ந்து பழனிச் சாமியை தாக்கி கத்தியால் சரமாரியாக குத்தினர்.

இதில் படுகாயம் அடைந்த பழனிச்சாமி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து ராமசாமி, அவருடைய மகன் ஏசுகுமார் ஆகியோரை கைது செய்தனர்.

இது தொடர்பாக வழக்கு விசாரணை கோவை குண்டுவெடிப்பு வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து வந்தது.

அதை விசாரித்த நீதிபதி பாலு, குற்றம் சாட்டப்பட்ட 2 பேருக்கும் ஆயுள் தண்ட னை மற்றும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் கார்த்திகேயன் ஆஜராகி வாதாடினார்.

ஏற்கனவே தண்டனை பெற்றவர்

இந்த வழக்கில் தண்டனை பெற்ற ராமசாமி ஏற்கனவே ஒரு பெண்ணை கொன்ற வழக்கில் கைதாகி கடந்த 1972-ம் ஆண்டு முதல் 1985-ம் ஆண் வரை 14 ஆண்டு சிறை தண்டனை பெற்றவர்.

நன்னடத்தை காரணமாக சிறையில் இருந்து விடுதலையான ராமசாமிக்கு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story