பெண் குழந்தைகளை தாக்கிய தந்தை கைது


பெண் குழந்தைகளை தாக்கிய தந்தை கைது
x
தினத்தந்தி 12 Aug 2023 7:15 PM GMT (Updated: 12 Aug 2023 7:15 PM GMT)

பந்தலூர் அருகே பெண் குழந்தைகளை தாக்கிய தந்தை கைது செய்யப்பட்டார். அவர் வாட்ஸ்-அப்பில் வீடியோ பதிவிட்டதால் போலீசில் சிக்கினார்.

நீலகிரி

பந்தலூர்

பந்தலூர் அருகே பெண் குழந்தைகளை தாக்கிய தந்தை கைது செய்யப்பட்டார். அவர் வாட்ஸ்-அப்பில் வீடியோ பதிவிட்டதால் போலீசில் சிக்கினார்.

குழந்தைகளை தாக்கினார்

பந்தலூர் அருகே கோரஞ்சால் பகுதியை சேர்ந்தவர் ரவி என்ற சூர்யா (வயது 30). தொழிலாளி. இவருடைய மனைவி ஜெயலட்சுமி. இவர் மலேசியாவில் பணிபுரிந்து வருகிறார். இதனால் ரவி தனது பாட்டி ரஞ்சம்மா, மகள்கள் ராசினி (3), ரசினி (1) ஆகியோருடன் வசித்து வருகிறார். இதற்கிடையே ரவி தனது மனைவியிடம் வேலையை விட்டு விட்டு குழந்தைகளை கவனிக்க சொந்த ஊருக்கு வருமாறும், இங்கு கூலி வேலை பார்த்துக்கொள்ளலாம் கூறி உள்ளார்.

அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ரவி தனது 2 குழந்தைகளை தாக்கி தகாத வார்த்தையால் திட்டி உள்ளார். மேலும் அவர் தனது குழந்தைகளை தாக்கியதை செல்போனில் வீடியோ எடுத்து உள்ளார். தொடர்ந்து அவர் அந்த வீடியோவை ஜெயலட்சுமிக்கு வாட்ஸ்-அப்பில் அனுப்பினார்.

போலீசார் மீட்டனர்

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், இதுகுறித்து தனது உறவினர்களிடம் தெரிவித்து வீடியோவை அனுப்பி உள்ளார். இதையடுத்து ரவி குழந்தைகளை தாக்கிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. இதனால் பொதுமக்கள் சேரம்பாடி போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர். தொடர்ந்து ரவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் அமுதா, சப்-இன்ஸ்பெக்டர் சிக்கந்தர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று 2 பெண் குழந்தைகளையும் மீட்டனர்.

இதைத்தொடர்ந்து கலெக்டர் அம்ரித் உத்தரவின் படி, ஊட்டி குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக பணியாளர் பாமாவிடம் 2 குழந்தைகளை போலீசார் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவியை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story