ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் இன்ஸ்பெக்டர் கைது


ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் இன்ஸ்பெக்டர் கைது
x

ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் மாலதியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

திருச்சி,

திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகா வாளாடியை சேர்ந்த மாணிக்கம் மகன் யுவராஜ். இவரது குடும்பத்திற்கும், அருகில் உள்ள ஜெகதீசன் என்பவரின் குடும்பத்திற்கும் பிரச்சினை இருந்து வந்தது. இதுதொடர்பாக லால்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் யுவராஜ் புகார் அளித்தார்.

அதன்பேரில் ஜெகதீசன் மீது கடந்த மாதம் 2-ந்தேதி போக்சோ சட்டத்தின் கீழ் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாலதி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்தார். இந்த வழக்கு புலன் விசாரணையில் இருந்து வரும் நிலையில், இந்த வழக்கு தொடர்பாக கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்றால், அதற்காக தனக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சமாக தரவேண்டும் என்று இன்ஸ்பெக்டர் மாலதி கேட்டுள்ளார்.

ரூ.5 ஆயிரம் லஞ்சம்

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத யுவராஜ் திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸ் நிலையத்திற்கு சென்று இதுபற்றி ஆதாரங்களுடன் புகார் அளித்தார். அதன்பேரில், லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், அவர்கள் யுவராஜிடம் ரசாயன பொடி தடவிய 500 ரூபாய் நோட்டுகளை ரூ.5 ஆயிரத்துக்கு கொடுத்து, அதை லஞ்சம் கேட்ட பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாலதியிடம் போலீஸ் நிலையத்துக்கு சென்று கொடுக்கும்படி கூறினர்.

கையும் களவுமாக கைது

அதன்படி, நேற்று காலை 10 மணி அளவில் லால்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு யுவராஜ் ரசாயன பொடி தடவிய பணத்துடன் சென்றார். பின்னர் அங்கிருந்த பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாலதியிடம், யுவராஜ் லஞ்ச பணத்தை கொடுத்தார்.

அப்போது, லஞ்ச போலீசார் அங்கு ஏற்கனவே மாறுவேடத்தில் நின்று கொண்டிருந்தனர். பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் லஞ்சப்பணத்தை பெற்றதும், அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் இன்ஸ்பெக்டர் மாலதி திருச்சியில் உள்ள சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். தொடர்ந்து கோர்ட்டு உத்தரவின்பேரில் அவர் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் திருச்சி பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story