பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கு: வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் விழுப்புரம் கோர்ட்டில் சாட்சியம் விசாரணை நாளை மறுநாள் ஒத்திவைப்பு


பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கு:  வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் விழுப்புரம் கோர்ட்டில் சாட்சியம்  விசாரணை நாளை மறுநாள் ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 13 Dec 2022 6:45 PM GMT (Updated: 13 Dec 2022 6:46 PM GMT)

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில் வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் விழுப்புரம் கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

விழுப்புரம்


பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இவ்வழக்கின் புகார்தாரரான பெண் ஐ.பி.எஸ். அதிகாரியிடம் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணையை நிறைவு செய்ததை தொடர்ந்து இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளிடம் தற்போது விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆகிய இருவரும் ஆஜராகினர்.

ஐ.ஏ.எஸ். அதிகாரி சாட்சியம்

மேலும் இவ்வழக்கில் நேற்று அரசு தரப்பு சாட்சியான முன்னாள் உள்துறை செயலாளரும் தற்போதைய வருவாய்த்துறை நிர்வாக ஆணையருமான பிரபாகர் நேரில் ஆஜராகி வழக்கு தொடர்பாக சாட்சியம் அளித்தார். அவர் 2½ மணி நேரத்திற்கும் மேலாக சாட்சியம் அளித்தார். அவரது சாட்சியம் முடிந்ததும் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரின் தரப்பு வக்கீல்கள் குறுக்கு விசாரணை செய்தனர். ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரபாகர் அளித்த சாட்சியம் மற்றும் அவரிடம் நடத்தப்பட்ட குறுக்கு விசாரணை முழுவதையும் நீதிபதி புஷ்பராணி பதிவு செய்துகொண்டார்.

மேலும் இவ்வழக்கு தொடர்பாக ஐ.சி.சி. கமிட்டி தாக்கல் செய்த விசாரணையின் அறிக்கையை கேட்டு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பு வக்கீல் ஏற்கனவே மனுதாக்கல் செய்திருந்த நிலையில் அம்மனு நேற்று விசாரணைக்கு வந்தது. இம்மனு மீதான விசாரணையின்போது முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பு வக்கீல் ஆஜராகி, ஐ.சி.சி. கமிட்டியின் விசாரணை அறிக்கையை தரும்படி வாதிட்டார். அதற்கு அரசு தரப்பு வக்கீல் வைத்தியநாதன் குறுக்கிட்டு, இந்த விசாரணை அறிக்கையை வழங்கினால் சாட்சியங்களை கலைக்க நேரிடலாம் என்பதால் அந்த விசாரணை அறிக்கையை வழங்கக்கூடாது என்று வாதிட்டார்.

நாளை மறுநாள் ஒத்திவைப்பு

இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி புஷ்பராணி, இவ்வழக்கின் விசாரணையை நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) ஒத்திவைத்து உத்தரவிட்டார்.


Next Story