பெண் சிறுத்தை மர்ம சாவு

மசினகுடி அருகே 6 வயது பெண் சிறுத்தை மர்மமாக இறந்து கிடந்தது. இதுதொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூடலூர்
மசினகுடி அருகே 6 வயது பெண் சிறுத்தை மர்மமாக இறந்து கிடந்தது. இதுதொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுத்தை சாவு
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள், புலிகள், சிறுத்தைகள் உள்பட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. காப்பகத்தின் வெளிமண்டல பகுதியான மசினகுடி, சிங்காரா, சீகூர் வனச்சரகங்களில் விலை உயர்ந்த மரங்களும் உள்ளது. இதனால் வன ஊழியர்கள் தினமும் ரோந்து பணி மேற்கொள்வது வழக்கம்.
இந்தநிலையில் மசினகுடி-ஊட்டி சாலையில் வாழைத்தோட்டம் பிரிவில் வன ஊழியர்கள் நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசியது. இதைத்தொடர்ந்து அப்பகுதியில் கண்காணிப்பை தீவிரமாக மேற்கொண்டனர். அப்போது கல்வெட்டு பகுதிக்குள் சிறுத்தை ஒன்று மர்மமாக இறந்து கிடப்பது தெரிய வந்தது.
பிரேத பரிசோதனை
இதைத்தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ், மசினகுடி கோட்ட துணை இயக்குனர் அருண் ஆகியோர் தேசிய புலிகள் முகமையின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பிரேத பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிட்டனர். இதைத்தொடர்ந்து சிங்கார வனச்சரகர் ஜான் பீட்டர் தலைமையிலான வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.
இறந்து கிடந்தது 6 வயதான பெண் சிறுத்தை என்பது தெரியவந்தது. பின்னர் சிறுத்தையின் உடல் கால்நடை டாக்டர்கள் மூலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது, சிறுத்தை இறப்புக்கான காரணம் தெரியவில்லை. வேறு ஏதேனும் வனவிலங்குகள் தாக்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும் முக்கிய உடற்பாகங்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. தொடர்ந்து பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகு சிறுத்தை இறப்புக்கான காரணம் தெரிய வரும் என்றனர்.






