பெண் மர்மசாவு


பெண் மர்மசாவு
x

திட்டக்குடியில் பெண் மர்மமான முறையில் இறந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர்

திட்டக்குடி,

விருத்தாசலம் அடுத்த சிறுவம்பார் கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவருடைய மகள் அனிதா (வயது 30). இவருக்கும் திட்டக்குடி கூத்தப்பன் குடிகாடு பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி மகன் ராமசாமி என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் ராமசாமி தனது குடும்பத்துடன் திட்டக்குடி அருகே ஆவினங்குடியில் வசித்து வந்தார். திருவிழாவிற்காக ராமசாமி தன் தந்தை வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றார்.

அப்போது அனிதா, குழந்தைகள் 2 பேருக்கும் கல்வி கட்டணம் ரூ.50 ஆயிரம் செலுத்த பணம் தருமாறு ராமசாமியிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறியதாக தெரிகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

போலீசார் விசாரணை

இந்த நிலையில் அனிதா வீட்டு சமையறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்த தகவலின் பேரில் திட்டக்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அனிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து அனிதாவின் தாய் அமுதா போலீசில் புகார் ஒன்றை அளித்தார்.

அதில் எனது மகள் அனிதா சாவில் சந்தேகம் உள்ளது. எனவே குறித்த உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குடும்ப பிரச்சினை காரணமாக அனிதா தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது அவரை யாரேனும் அடித்து கொலை செய்தார்களா என விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story