கோவில் வளாகத்தில் பிணமாக கிடந்த பெண் பூசாரி


கோவில் வளாகத்தில் பிணமாக கிடந்த பெண் பூசாரி
x
தினத்தந்தி 4 Oct 2023 6:45 PM GMT (Updated: 4 Oct 2023 6:46 PM GMT)

ரிஷிவந்தியம் அருகே கோவில் வளாகத்தில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த பெண் பூசாரி கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கள்ளக்குறிச்சி

ரிஷிவந்தியம்

பெண் பூசாாி

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அருகே உள்ள அலியாபாத்பாளையத்தை சேர்ந்தவர் கணபதி மனைவி ஆனந்தாயி(வயது 73). கடந்த 20 வருடங்களுக்கு முன்பு கணபதி இறந்து விட்டதால், ஆனந்தாயி அதே பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் தங்கி பூசாரியாக வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் பூஜை முடிந்த பின்னர் கோவிலை மூடிவிட்டு கோவில் வளாகத்திலேயே ஆனந்தாயி தூங்கினார்.

பக்தர்கள் அதிர்ச்சி

பின்னர் நேற்று காலை கோவிலுக்கு சாமி தரிசனம்செய்ய வந்த பக்தா்கள் ஆனந்தாயி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு கிராமமக்கள் அங்கே திரண்டனர். இது குறித்து அவர்கள் உடனடியாக போலீசுக்கு தகவல்கொடுத்தனர். அதன் பேரில் திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோஜ்குமார், இன்ஸ்பெக்டர் பாலாஜி, ரிஷிவந்தியம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகோபால் மற்றும் போலீசார் விரைந்து வந்து ஆனந்தாயியின் உடலை பார்வையிட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

மோப்பநாய் வரவழைப்பு

இச்சம்பவத்தை கேள்விப்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் அங்கு விரைந்து வந்து ஆனந்தாயி இறந்து கிடந்த இடத்தை பார்வையிட்டார்.

ஆனந்தாயியின் இறப்பு குறித்து துப்பு துலக்குவதற்காக விழுப்புரத்தில் இருந்து மோப்பநாய் ராக்கி வரவழைக்கப்பட்டது. அது கோவில் வளாகத்திலேயே அங்கும் இங்குமாக சுற்றி வந்தது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

போலீசார் தீவிர விசாரணை

இரவு நேரத்தில் யாராவது மர்ம நபர்கள் கோவிலில் திருட வந்தபோது அவர்களை பார்த்து ஆனந்தாயி சத்தமிட்டதால் அச்சமடைந்து மர்மநபர்கள் அவரை கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் அவரது இறப்புக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவில் வளாகத்தில் பெண் பூசாரி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த சம்பவம் அலியாபாத்பாளையம் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story