மாடுகள் மாலை தாண்டும் திருவிழா


மாடுகள் மாலை தாண்டும் திருவிழா
x

தோகைமலை அருகே தெலுங்குப்பட்டியில் மாடுகள் மாலை தாண்டும் திருவிழா நடந்தது.

கரூர்

மாடுகள் மாலை தாண்டும் திருவிழா

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே தெலுங்குப்பட்டியில் பிரசித்தி பெற்ற சக்காளம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மாடுகள் மாலை தாண்டும் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறும். அதேபோல் இந்தாண்டும் திருவிழா காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. முதல் நாள் தேவராட்டமும், 2-ம் நாள் சக்காளம்மனுக்கு கம்பு கொழுக்கட்டை படையல் போட்டு வழிபாடு நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று மாலை மாடுகள் மாலை தாண்டும் நிகழ்ச்சி நடந்தது.

வரவேற்பு

இதில் கலந்து கொள்வதற்காக திண்டுக்கல், திருச்சி, கரூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 14 மந்தையர்கள் வந்தனர். அவர்களுக்கு கஸ்தூரிரெங்க வசகப்பு நாயக்கர் பாளையப்பட்டு மந்தை சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் சக்காளம்மன் கோவில் முன்பு 14 மந்தைகளின் மாடுகள் வரிசையாக நிறுத்தப்பட்டு, அதன் மீது தனித்தனியே புனிதநீர் தெளிக்கப்பட்டது.

தொடர்ந்து மாடுகள் அனைத்தும் தாரை, தப்பட்டை உருமி முழங்க கஸ்தூரிரெங்க வசகப்பு நாயக்கர் பாளையப்பட்டு மந்தை எதிரே சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எல்லைசாமி கோவிலுக்கு அழைத்து சென்றனர். பின்னர் அங்கு எல்லைசாமிக்கு சிறப்பு அபிஷேகமும், மாடுகளுக்கு புனித தீர்த்தம் தெளித்து மாடுகள் மாலை தாண்டும் திருவிழா தொடங்கி வைக்கப்பட்டது.

எலுமிச்சைப்பழம் பரிசு

இதையடுத்து 200-க்கும் மேற்பட்ட மாடுகள் எல்லைசாமி கோவிலில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் கஸ்தூரிரெங்க வசகப்பு நாயக்கர் பாளையப்பட்டு மந்தையில் உள்ள எல்லைக்கோட்டை நோக்கி சீறிப்பாய்ந்து ஓடின.

இதில், கரூர் மாவட்டம், கோவில்பட்டி பஸ்பேரி நாயக்கர் மந்தை மாடு முதலாவதாக ஓடி வந்து எல்லை கோட்டை தாண்டியது.

2-வதாக திருச்சி மாவட்டம் சேமங்களம் பகுதி அய்யாசாமி மந்தை மாடு எல்லைக்கோட்டை தாண்டியது. இதையடுத்து முதலாவதாக ஓடிவந்த மாட்டின் மீது சமூக வழக்கப்படி 3 கன்னி பெண்கள் வைத்திருந்த மஞ்சள் பொடி தூவப்பட்டு, எலுமிச்சைப்பழம் வெற்றி பரிசாக வழங்கப்பட்டது.

வழி அனுப்பும் நிகழ்ச்சி

பின்னர் 3 கன்னி பெண்களும் எல்லை கோட்டில் இருந்து தேவராட்டத்துடன் சக்காளம்மன் கோவிலுக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து அனைத்து மந்தையர்களையும் வழி அனுப்பும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் சக்காளம்மனுக்கு பொங்கல் வைத்தல், அபிஷேக ஆராதனையுடன் திருவிழா முடிவடைந்தது.

இந்த திருவிழாவில் ஜமீன்தார் தர்மபிரபு, மந்தை நாயக்கர்கள், ஊர் நாயக்கர்கள், கம்புளி நாயக்கர், கோடங்கி நாயக்கர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story