வதான்யேஸ்வரர் கோவிலில் ஐப்பசி கடைமுக தீர்த்தவாரி உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது


வதான்யேஸ்வரர் கோவிலில் ஐப்பசி கடைமுக தீர்த்தவாரி உற்சவம்   கொடியேற்றத்துடன் தொடங்கியது
x
தினத்தந்தி 7 Nov 2022 7:00 PM GMT (Updated: 7 Nov 2022 7:01 PM GMT)

மயிலாடுதுறை வதான்யேஸ்வரர் கோவிலில் ஐப்பசி கடைமுக தீர்த்தவாரி உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை வதான்யேஸ்வரர் கோவிலில் ஐப்பசி கடைமுக தீர்த்தவாரி உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

துலா உற்சவம்

மயிலாடுதுறையில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் நடைபெறும் காவிரி துலா உற்சவம் மிகவும் புகழ் பெற்றதாகும். பக்தர்கள் புனித நீராடியதால் ஏற்பட்ட பாவச்சுமைகளின் காரணமாக கருமை நிறம் அடைந்த கங்கை நதி உள்ளிட்ட ஜீவநதிகள் அனைத்தும் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடி சிவனை வழிபட்டு தங்கள் பாவங்களை போக்கிகொண்டதாக புராண வரலாறு கூறுகிறது.

அதன் அடிப்படையில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் துலா உற்சவம் கொண்டாடப்பட்டு வருகிறது. அப்போது சிவாலயங்களில் இருந்து சாமி புறப்பாடாகி, துலா கட்டத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறும். வழக்கம்போல் இந்த ஆண்டு ஐப்பசி மாதம் 1-ந் தேதி துலா உற்சவம் தொடங்கியது.

கொடியேற்றம்

அதைத்தொடர்ந்து 10 நாள் நடைபெறும் ஐப்பசி கடைமுக தீர்த்தவாரி உற்சவம் மயிலாடுதுறை வதான்யேஸ்வரர் கோவிலில் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதை முன்னிட்டு கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் கொடிமரம் அருகே விநாயகர், அஸ்திர தேவர் எழுந்தருளினர்.

அதைத்தொடர்ந்து கொடி மரத்திற்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு ரிஷப கொடி ஏற்றப்பட்டது. தருமபுரம் ஆதீனக் கட்டளை சிவகுருநாத கட்டளைத்தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கோவில் தலைமை அர்ச்சகர் பாலச்சந்திர சிவாச்சாரியார், பூஜைகளை செய்து வைத்தார்.

இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

கடைமுக தீர்த்தவாரி

முக்கிய விழாவான திருக்கல்யாணம் வருகிற 13-ந் தேதியும் (ஞாயிற்றுக்கிழமை), தேரோட்டம் 15-ந் தேதியும் (செவ்வாய்க்கிழமை), கடைமுக தீர்த்தவாரி 16-ம் தேதியும் (புதன்கிழமை) நடைபெறுகிறது.

பல்வேறு சிவாலயங்களிலும் இதுபோல் உற்சவங்கள் தொடங்கியுள்ள நிலையில் 16-ந் தேதி கடைமுக தீர்த்தவாரியை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் லலிதா உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.


Next Story