கண்ணாடி இழைவலையமைப்பு இணையதள வசதி


கண்ணாடி இழைவலையமைப்பு இணையதள வசதி
x
தினத்தந்தி 25 Aug 2023 6:45 PM GMT (Updated: 25 Aug 2023 6:45 PM GMT)

மாவட்டத்தில் 412 கிராம ஊராட்சிகளில் கண்ணாடி இழைவலையமைப்பு இணையதள வசதி செயல்படுத்தப்பட்டு வருவதாக மாவட்ட கலெக்டர் கலெக்டர் ஷ்ரவன்குமார் தொிவித்தார்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அடுத்த மாதம் முதல்

பாரத் நெட் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் மூலம் மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 412 கிராம ஊராட்சிகளில் இணையதள வசதி தற்போது முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இணையதள இணைப்பு வழங்கும் பணியானது அடுத்த மாதம்(செப்டம்பர்) முதல் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கண்ணாடி இழை இணைப்பானது 85 சதவீதம் மின்கம்பங்கள் மூலமாகவும், 15 சதவீதம் தரை வழியாகவும் இணைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கான உபகரணங்கள் ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் உள்ள கிராம சேவை மையம் அல்லது அரசு கட்டிடத்தில் நிறுவப்பட்டு வருகிறது. இந்த உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ள அறையானது சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவரால் தூய்மையாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

கடும் நடவடிக்கை

மேலும் இத்திட்டத்திற்கான உபகரணங்களை பாதுகாத்திடவும், தடையில்லா மின்வசதி உள்ளதை உறுதி செய்வது உள்ளிட்ட பணிகளுக்கு சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி செயலாளர் அரசாணையின்படி பொறுப்பாக்கப்பட்டுள்ளார். இதனால் இத்திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் போது ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் வசிக்கும் மக்கள் அனைவரும் இணையதள வசதிகளை பெற முடியும். ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் நிறுவப்படும் உபகரணங்கள் அனைத்தும் அரசின் உடைமைகளாகும். மேற்கண்ட உபகரணங்களை சேதப்படுத்தும் அல்லது திருடும் நபர்கள் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் காவல் துறையினர் மூலம் கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story