கிருஷ்ணகிரி பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி - முதல் அமைச்சர் அறிவிப்பு


கிருஷ்ணகிரி பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி  - முதல் அமைச்சர் அறிவிப்பு
x
தினத்தந்தி 29 July 2023 9:51 AM GMT (Updated: 29 July 2023 10:29 AM GMT)

கிருஷ்ணகிரி பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.

சென்னை,

கிருஷ்ணகிரி பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் வட்டம், பழையபேட்டை நகரம், நேதாஜி ரோடு, போகனப்பள்ளி கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்கு சொந்தமான பட்டாசு கடையில் இன்று (29-7-2023) காலை எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் எட்டு பேர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினை கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்பார்வையிட்டு துரிதப்படுத்த உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணியை அனுப்பிவைத்துள்ளேன். மேலும், இவ்விபத்தில் படுகாயமடைந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளேன்.

உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.


Next Story