பரமத்திவேலூர் அருகேதேங்காய் நார் மில் தொழிற்சாலையில் திடீர் தீ


பரமத்திவேலூர் அருகேதேங்காய் நார் மில் தொழிற்சாலையில் திடீர் தீ
x
தினத்தந்தி 3 March 2023 7:00 PM GMT (Updated: 3 March 2023 7:00 PM GMT)
நாமக்கல்

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் அருகே உள்ள பெரிய கரசப்பாளையத்தை சேர்ந்தவர் பிரபாகர் (வயது 40). இவர் ஓலப்பாளையம் பகுதியில் தேங்காய் நார் மில் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இங்கு தேங்காய் மட்டைகளில் இருந்து நார் பிரித்து எடுத்து அதை கட்டிகளாக தயார் செய்தும், தேங்காய் நாரை தூளாக அரைத்தும் தனித்தனியாக வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தேங்காய் நார் தொழிற்சாலையில் நேற்று மதியம் 12 மணி அளவில் திடீரென தீப்பிடித்தது. இதனை பார்த்த அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் உடனடியாக நாமக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு படை வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும் தொழிற்சாலையில் இருந்த 30-க்கும் மேற்பட்ட மின் மோட்டார்கள், கன்வேயர் பெல்ட்டுகள், தேங்காய் நாரை பாலில் செய்யும் சல்லடைகள், மட்டை போடும் கூண்டுகள், தேங்காய் நார்கள் உள்ளிட்டவை எரிந்து சேதமடைந்தது. இதன் மதிப்பு ரூ.70 லட்சம் வரை இருக்கலாம் என கூறப்படுகிறது.


Next Story