காரிமங்கலம் அருகேசுகாதார ஆய்வாளர் வீட்டில் தீ விபத்துபோலீசார் விசாரணை


காரிமங்கலம் அருகேசுகாதார ஆய்வாளர் வீட்டில் தீ விபத்துபோலீசார் விசாரணை
x
தினத்தந்தி 14 April 2023 7:00 PM GMT (Updated: 15 April 2023 9:41 AM GMT)
தர்மபுரி

காரிமங்கலம்:

காரிமங்கலம் அருகே சுகாதார ஆய்வாளர் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுகாதார ஆய்வாளர்

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த மாட்லாம்பட்டியை சேர்ந்தவர் மாதையன். இவர் காரிமங்கலம் அரசு மருத்துவமனையில் சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் மாட்லாம்பட்டியில் உள்ள சொந்த வீட்டில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று மாதையன் மற்றும் குடும்பத்தினர் கோவிலுக்கு சென்று விட்டு கீழ் வீட்டில் இருந்தனர். அப்போது வீட்டின் மேல்புறம் உள்ள அறையில் இருந்து புகை கிளம்பியது. இதை பார்த்த குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் மேலே சென்றபோது மாடி வீட்டில் உள்ள அறையில் தீப்பிடித்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

விசாரணை

பின்னர் மாதையன் மற்றும் அங்கிருந்தவர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ கொழுந்து விட்டு எரிந்ததால் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தர்மபுரி தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைககும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயை அனைத்தனர். வீட்டில் இருந்தவர்கள் கீழ் வீட்டில் இருந்ததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. எனினும் அறையில் இருந்த பீரோ, கட்டில் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானது. தகவல் அறிந்து காரிமங்கலம் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் வீட்டில் இருந்த ஏ.சி. வெடித்து அல்லது சமையல் கியாஸ் சிலிண்டரில் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. இதுகுறித்து காரிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story