பெருந்துறை அருகே சாக்கு குடோனில் தீ விபத்து; பொருட்கள் எரிந்து நாசம்


பெருந்துறை அருகே சாக்கு குடோனில் தீ விபத்து; பொருட்கள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 3 April 2023 6:45 PM GMT (Updated: 3 April 2023 6:46 PM GMT)

பெருந்துறை அருகே சாக்கு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருட்கள் எரிந்து நாசமாயின.

ஈரோடு

பெருந்துறை

பெருந்துறை அருகே சாக்கு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருட்கள் எரிந்து நாசமாயின.

புற்களில் பற்றிய தீ

பெருந்துறையை சேர்ந்தவர் சிவக்குமார். இவருக்கு சொந்தமான குடோன் பெருந்துறையில் இருந்து பவானி செல்லும் ரோட்டில் கந்தம்பாளையம் பிரிவில் உள்ளது. இந்த குடோனில் பிளாஸ்டிக் சாக்குப்பைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

நேற்று காைல 11 மணியளவில் அந்த பகுதி வழியாக சென்ற யாரோ ஒருவர் சிகரெட் புகைத்துவிட்டு அதை அணைக்காமல் ரோட்டோரம் காய்ந்து கிடந்த புற்களில் வீசிவிட்டு சென்று விட்டார். இதனால் அதில் பற்றிய தீ அருகே உள்ள குடோனுக்கும் பரவியது.

பொருட்கள் எரிந்தன

சில நொடிகளில் குடோனில் வைத்திருந்த சாக்குப்பை மற்றும் பழைய துணிகளில் தீ பற்றி கொழுந்துவிட்டு எரிந்தது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே பெருந்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். எனினும் தீயை முழுமையாக அணைக்க 2 மணி நேரம் ஆனது.

இந்த தீ விபத்தில் குடோனில் வைத்திருந்த சாக்குப்பைகள், துணி பேல்கள் எரிந்து சாம்பலாகிவிட்டன. அதன் சேதமதிப்பு எவ்வளவு என்று தெரியவில்லை.

இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story