வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் முதல் இடம்


வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் முதல் இடம்
x
தினத்தந்தி 7 Oct 2022 6:45 PM GMT (Updated: 7 Oct 2022 6:45 PM GMT)

கள்ளக்குறிச்சி மாவட்டம் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் மாநில அளவில் முதல் இடத்திலும், இ-அடங்கல் பதிவேற்றத்தில் 3-வது இடத்திலும் இருப்பதாக கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

2,400 பேருக்கு சாதி சான்றிதழ்

தமிழக முதல்-அமைச்சர் அறிவுறுத்தலின்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களில் இருளர், மலைவாழ் மக்கள், ஆதியன் இனத்தைச் சேர்ந்த பூம் பூம் மாட்டுக்காரர்கள் உட்பட்ட பழங்குடியினருக்கு 2 ஆயிரத்து 400 சாதி சான்றிழ் வழங்கப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்குவதில் மாநில அளவில் 38-வது இடத்திலிருந்து தற்போது 12-வது இடத்தை பெற்றுள்ளோம்.

மேலும் நரிக்குறவர் மற்றும் பழங்குடியினருக்கு 1,840 ஒருங்கிணைந்த பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக தென்கீரனூர் கிராமத்தில் பூர்வ பழங்குடி ஆதியன் இனத்தை சேர்ந்த பூம் பூம் மாட்டுக்காரர்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பொது இடங்களில் தஞ்சம் அடைந்து வாழ்ந்து வந்தனர். இவர்கள் நிரந்தரமாக குடியிருப்பதற்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கக்கோரி மனு அளித்ததை அடுத்து வருவாய்த்துறை மூலம் அவர்கள் கூறிய இடத்தை ஆய்வு செய்து, அந்த இடங்களிலேயே 5 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இதற்காக பழங்குடியின மக்கள் தமிழக அரசுக்கு நன்றியினையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

மாநிலத்தில் முதல் இடம்

இதேபோல் ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்களுக்கு கடந்த 2 மாதங்களில் 4,500 இ-பட்டாக்கள் வழங்கப்பட்டு மாநில அளவில் 13-வது இடத்தை பெற்றுள்ளோம். இ-அடங்கல் பதிவேற்றத்தில் மாநில அளவில் 3-வது இடத்திலும், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் மாநில அளவில் முதலாம் இடத்திலும் கள்ளக்குறிச்சி மாவட்டம் உள்ளது. மேலும் மாவட்டத்தில் விளிம்பு நிலையில் வீடுகளற்ற பொதுமக்கள் தொடர்புடைய வருவாய்த்துறை அலுவலர்களிடம் மனு கொடுத்து வீட்டு மனை பட்டாக்கள் பெற்று பயன்பெற வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story