உயர்கல்வி படிக்கும் முதலாம் ஆண்டு மாணவிகள் விண்ணப்பிக்கலாம்


உயர்கல்வி படிக்கும் முதலாம் ஆண்டு மாணவிகள் விண்ணப்பிக்கலாம்
x

விழுப்புரம் மாவட்டத்தில் மாதந்தோறும் ரூ.1,000 கல்வி உதவித்தொகை பெற உயர்கல்வி படிக்கும் முதலாம் ஆண்டு மாணவிகள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விழுப்புரம்

தமிழ்நாடு முதல்-அமைச்சரால் கடந்த 5.9.2022 அன்று அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து மேல்படிப்பு, தொழில்நுட்ப படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டம் தொடங்கப்பட்டது. இதுவரை 2, 3 மற்றும் 4-ம் ஆண்டில் படிக்கும் 1.13 லட்சம் மாணவிகள் இத்திட்டத்தில் உதவித்தொகையை பெற்று பயனடைந்துள்ளனர். தற்போது https://www.pudhumaipenn.tn.gov.in என்ற வலைதளத்தில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்.

இவ்வலைத்தளத்தில் மாணவிகள் அனைவரும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வாயிலாக நவம்பர் 1-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை பதிவு செய்யலாம். அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகள் மட்டுமே இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள். மாணவிகள் தங்கள் கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும். நேரடியாக விண்ணப்பிக்கக்கூடாது.

விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகுதி வரம்பு குறித்து அனைத்து மாணவிகளுக்கும் கல்வி பயிலும் நிறுவனங்களில் நவம்பர் 11-ந் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும். மாணவிகள் தவறாமல் அவர்களுடைய ஆதார் அட்டை மற்றும் (கல்வி மேலாண்மை தகவல் திட்ட எண்ணுக்காக EMIS No) மாற்றுச்சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். தற்போது 2, 3 மற்றும் 4-ம் ஆண்டுகளில் படிக்கும் மாணவிகள் முதற்கட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தவறியவர்கள் தற்போது விண்ணப்பிக்கலாம்.

மேலும் விண்ணப்பம் பூர்த்தி செய்யும் முறையில் மாணவிகளுக்கு சந்தேகங்கள் ஏதும் இருப்பின் சமூகநல இயக்குனரக அலுவலகத்தில் மாநில அளவில் செயல்படும் உதவி மையத்தை திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 91500 56809, 91500 56805, 91500 56801, 91500 56810 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும் mraheas@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். மேல்படிப்பு, தொழில்நுட்ப படிப்புகளில் முதலாம் ஆண்டு படிக்கும் இத்திட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த மாணவிகள் அனைவரும் விண்ணப்ப முறையை சரியாக தெரிந்துகொண்டு தவறாமல் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story