ரூ.78 லட்சத்தில் மீன் மார்க்கெட்


ரூ.78 லட்சத்தில் மீன் மார்க்கெட்
x
தினத்தந்தி 1 Feb 2023 6:45 PM GMT (Updated: 1 Feb 2023 6:46 PM GMT)

பொள்ளாச்சியில் ரூ.78 லட்சம் செலவில் மீன் மார்க்கெட் கட்டும் பணி தொடங்கி உள்ளது. இந்த பணிகளை 6 மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி,

பொள்ளாச்சியில் ரூ.78 லட்சம் செலவில் மீன் மார்க்கெட் கட்டும் பணி தொடங்கி உள்ளது. இந்த பணிகளை 6 மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

மீன் மார்க்கெட்

பொள்ளாச்சி நகரில் ராஜாமில் ரோடு, பாலக்காடு ரோடு, நியூஸ்கீம் ரோடு, கோவை ரோடு உள்பட பல்வேறு பகுதிகளில் மீன், கோழி, ஆடு உள்ளிட்ட இறைச்சி கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதற்கிடையில் சிலர் கழிவுளை ஆங்காங்கே கொட்டி விட்டு செல்கின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

இதன் காரணமாக பொள்ளாச்சியில் ஒருங்கிணைந்த மீன் மார்க்கெட் கட்ட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து நகராட்சி மூலம் காந்தி மார்க்கெட் அருகில் மீன் மார்க்கெட் கட்டும் பணிகள் தொடங்கி உள்ளது. தற்போது பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டும் பணிகள் நடந்து வருகிறது. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

ரூ.78 லட்சம் ஒதுக்கீடு

பொள்ளாச்சியில் ஒருங்கிணைந்த மீன் மார்க்கெட் கட்ட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர். இதை தொடர்ந்து கலைஞரின் நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் மூலம் மீன் மார்க்கெட் கட்டுவதற்கு ரூ.78 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. காந்தி மார்க்கெட் அருகில் தோல் சந்தை செயல்பட்ட இடத்தில் 83 சென்ட் பரப்பளவில் மீன் மார்க்கெட் கட்டப்படுகிறது. இதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. மீன், ஆடு, கோழி இறைச்சி விற்பனைக்கு தலா 16 கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

இதை தவிர இறைச்சிகளை கழுவி சுத்தம் செய்வதற்கு 8 கடைகள் ஒதுக்கப்படுகிறது. பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், மின் விளக்கு உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படும். மேலும் அருகில் கழிப்பிடத்தை புனரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மீன் மார்க்கெட் கட்டும் பணிகளை 6 மாத காலத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. கட்டுமான பணிகள் முடிந்ததும் நகரில் உள்ள மீன், ஆடு, கோழி இறைச்சி கடைகள் இங்கு செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story