ராமேசுவரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் விரட்டியடிப்பு


ராமேசுவரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் விரட்டியடிப்பு
x

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டி அடித்தனர். மேலும் மீனவர்களின் வலைகளை அறுத்தும் அவர்கள் சேதப்படுத்தியதாக தெரிகிறது.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டி அடித்தனர். மேலும் மீனவர்களின் வலைகளை அறுத்தும் அவர்கள் சேதப்படுத்தியதாக தெரிகிறது.

நடுக்கடல்

ராமேசுவரத்தில் இருந்து நேற்றுமுன்தினம் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2000-க்கும் அதிகமான மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இவ்வாறு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் கச்சத்தீவு அருகே உள்ள நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது 3 ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டி அடித்ததாக கூறப்படுகிறது. மேலும் 10-க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன்களுக்காக விரித்திருந்த வலைகளையும் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

விரட்டியடிப்பு

இலங்கை கடற்படை விரட்டியடிப்பால் நேற்று காலை குறைந்த அளவிலான மீன்களுடன் மீனவர்கள் கரை திரும்பினர்.

இலங்கை கடற்படை விரட்டியடிப்பு சம்பவம் குறித்து மீனவர்கள் யாரும் மீன்துறை அலுவலகத்தில் எந்த ஒரு புகார் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story